Saturday, October 31, 2009

கவிதைப் பெண்...!

கவிதை கூட
பெண்ணின் பார்வை போலத்தான்...
ஆயிரம் அர்த்தங்கள் இருக்க வேண்டும்!

கவிதை கூட
பெண்ணின் மனசு போலத்தான்...
ஆழமாயிருக்க வேண்டும்!

கவிதை கூட
பெண்ணின் இடை போலத்தான்...
'சிக்' என்றிருக்க வேண்டும்!

கவிதை கூட
பெண்ணைப் போலத்தான்...
ரசித்து அனுபவிக்க வேண்டும்,
ஆராயக்கூடாது!

நடுத்தரம்!

முதல் வாரமே
மாதக்கடைசியாகி
மீண்டும்
முதல் வாரம் தேடும்
தரித்திரம்!

Thursday, October 29, 2009

தனியன்

வீடு சுற்றி தோட்டம் வளர்த்து,
பதியன் போட்டு, பூ வளர்த்து,
தனியாய் ரசிப்பேன் நான்
தனியாய் வந்தவன்தானே நான்,
போகப் போவதும் தனியாய்த்தான்!!

Wednesday, October 28, 2009

கனவு

விழித்திரையில் நம்
நினைவுகளின் நிழல்!

உறங்கையில் முழித்திருக்கும்,
விழிக்கையில் உறங்கிப்போகும்!

என்றோ எழுதிய கவிதை - 8

'மதர் டங் தெலுங்கு. படிக்கறது கான்வென்ட். அவளுக்கு போயி பர்த்டே ப்ரஸன்ட் பாலகுமாரன் புக்கா? அவளுக்கு இன்ட்ரெஸ்ட் இதுலல்லாம் இல்லங்கறதாவது உனக்கு தெரியுமா? ' என்று பொங்கிய தங்கைக்கு என் அவஸ்தை புன்னகைதான் பதில்.

பாலகுமாரன் எழுதிய 'மௌனமே காதலாகி...' புத்தகத்தின் முதல் பக்கத்தில்

'அன்பு' என்பது மூன்றெழுத்து
'நட்பு' என்பது மூன்றெழுத்து
'பாசம்' என்பது மூன்றெழுத்து
'.....' (அவள் பெயர்!) என்பதும் மூன்றெழுத்துதான்!

என்று கையொப்பமிட்டுக் கொடுத்ததின் பின்னணியை எப்படி என் அப்பாவித் தங்கையிடம் சொல்வேன்?!

இன்று, ஈஸிசேரில் உட்கார்ந்து அசை போடும் போது, "கொஞ்சம் தைரியமாய்
"'காதல்' என்பது மூன்றெழுத்து" எனும் வரிகளைச் சேர்த்திருந்தால்
'தோல்வி' என்ற மூன்றெழுத்தைத் தவிர்த்திருக்கலாமோ?!"
என்று தோன்றுகிறது!

Saturday, October 24, 2009

குத்தால சாரல்!

குத்தால சாரல் நீயடி!
உன் காதலில் நனைந்தேன் நானடி!
நிற்காத அருவி உன் நினைவடி!
குளித்தால் மனது குளிருதடி!

அருவியின் வெள்ளத்தில் நனைந்தேனே!
உன் பார்வையின் வெள்ளத்தில் மறைந்தேனே!
கண்ணிலே கண்ணிலே உனை நான் கண்டபின்
மண்ணிலே மண்ணிலே சொர்க்கம்தானே!

வீட்டினுள் அருவியைச் சிறையாக்க,
வாழ்வினில் பாதி உனையாக்க,
தாலிகட்டி சொந்தமாய்,
வேலி கட்டி மொத்தமாய், எனக்கு...!

பொறந்த கொழந்தை ரொம்ப அழகா இருந்தா திருஷ்டிப் பொட்டு வெப்பாங்க! அது போல, அருவியாக் கொட்டிய 'ஜே கே' கவிதைக்கு 'கேயார்' பதில் உரை இதோ... (பதில் கவிதைன்னு சொல்ல மனசு வர்லே!)

பார்க்கப் பார்க்க
அருவியும் அழகு...!
பார்க்கப் பார்க்க
பாவையும் அழகு...!

அருவியில் நனைந்தபின்
ஆனந்தமாய்க் குளித்தபின்
பசிதான் தோன்றும்...
மனம் உணவைத்தான் தேடும்!

உன்னில் நனைந்தபின்
உன்னில் குளித்தபின்
பசிதான் தீருமடி..!
உணர்வும் உறங்குமடி!

சாரலாய் நீயிருந்தாலும் - உனைச்
சார்ந்தேதான் நான் என்றும்!

அடியேய்!

விழித்து எழுகையில்,
குளித்து முடிக்கையில்,
உண்டு களிக்கையில்,
நடந்து போகையில்,
படுத்து உறங்கையில்,
விடாது துரத்தும்
நிழலாய் உன் நினைவு,
அடியேய்! என்னை வாழவிடு!
இல்லையேல் வாழ்வாய் வந்துவிடு!

Thursday, October 22, 2009

நதிகள்!

மலையில் ஜனித்து
நிலத்தில் புலம்பெயரும்
அகதிகள்!

வெயிலில் மெலிந்து,
மழையில் பெருத்து,
புயலில் பூரித்து,
கடலில் கலந்து போகும்
தியாகிகள்!

அரசியல் சாக்கடையால்
தம் உறவைச் சேர இயலா
அனாதைகள்!

நறுக்ஸ் - நாலு வரிகள்!

நறுக்ஸ்-1, நறுக்ஸ்-2, நறுக்ஸ்-3 மின்னஞ்சலில் வந்த கவிதைகள். நாங்கள் எழுதியது அல்ல.

நல்ல கவிதைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தில் வெளியிடப்பட்டவை. உங்களை, எங்களை சிந்திக்க வைத்த முகந்தெரியாத கவிஞர்களுக்கும், கருத்துக்களைப் பதித்த அனைத்து அன்பர்களுக்கும் நன்றி!

நறுக்ஸ் - 3

'நறுக்ஸ்' என்கிற தலைப்பு...
மின்னஞ்சலில் விழுந்த கவிதைகள்..
'நெருப்ஸ்' பறந்தன!

நன்றி: புனே தமிழ் சங்கம்

*திமிர்..*
வேலைக்காரன்மேல் பாய்ந்தார்
நாயே பீட்டரை கவனித்தாயா?
இவர் வீட்டில் பீட்டர் என்றால் நாய்
நாய் என்றால் மனிதன்.

*கொலை..*
ஒரு நாள் வாழ்க்கை பூவுக்கு…
விரியுமுன்பே பறித்து
இனறவனுக்கு அர்ச்சனை
செய்கிறான்
நூறாண்டு வாழ்ககை வேண்டி தனக்கு.

*அடக்கம்..*
அடக்கம் செய்யப்படுகிறோம்…
இரண்டு பெட்டிகளில்.
சவப்பொட்டியிலும்
தொலைக்காட்சிப் பெட்டியிலும்.

*ஆணாதிக்கம்..*
எப்படியும் இருக்கலாம்
ஆணிண் திமிர்
திரௌபதைக்கு கணவன் ஐந்தாகவும்
அர்ச்சுனனுக்கு மனைவி ஐந்தாகவும்

*வேலி..*
மயில் இறகு புலித்தோல்
மான் கொம்பு யானைத்தந்தம்
அழகாய் இருக்கிறது எங்கள் வீடு.
வனவிலங்குகள் காப்பாளர் அப்பா

Sunday, October 18, 2009

நறுக்ஸ் - 2

'நறுக்ஸ்' என்கிற தலைப்பு...
மின்னஞ்சலில் விழுந்த கவிதைகள்..
'நெருப்ஸ்' பறந்தன!

நன்றி: புனே தமிழ் சங்கம்


*ஊர்...*
ஊரில் உங்கள் சுடுகாடு.
சுடுகாட்டில் எங்கள் ஊர்.


*உறுத்தல்..*
இரவெல்லாம் விழித்திருந்து
எங்களுர் ஆச்சி இழைத்தபனைபபாய்…
வாங்கினேன் உறங்குவது எப்படி
இவள் பாயில்?


*மனிதன்..*
இவன் பசுவின் பாலைக்கறந்தால்
பசு பால் தரும் என்கிறான்.
காகம் இவன் வடையை எடுத்தால்
காகம் வடையை திருடிற்று என்கிறான்
இப்படியாக மனிதன்….

*மேடை...*
தமிழா!
ஆடாய் மாடாய்
ஆனாயடா…
நீ என்றேன்
கைதட்டினான்

*பெண்..*
ஏடுகளில் முன்பக்க
அட்டையில்
வீடுகளில் பின்பக்க
அடுப்பங்கரையில்.

Saturday, October 17, 2009

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

அப்பாவும் தீபாவளியும் உங்களை அசைத்துப் பார்க்கும் படைப்பு இது!


எங்கள் படைப்புகளைச்
சகித்து, சுகித்து,
பொறுத்துக்கொண்டிருக்கும்
வாசகர்கள் அனைவருக்கும்
எங்களின் சிரம் தாழ்ந்த,
உளங்கனிந்த,
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

Friday, October 16, 2009

நறுக்ஸ் - 1

'நறுக்ஸ்' என்கிற தலைப்பு...
மின்னஞ்சலில் விழுந்த கவிதைகள்..
'நெருப்ஸ்' பறந்தன!

நன்றி: புனே தமிழ் சங்கம்


*கோயில்..*

செருப்புகளை வெளியே விட்டு

உள்ளே போகிறது அழுக்கு.


*தளை..*

கணவனிடம் ஓப்புதல் கேட்கிறாள்

பெண்கள் விடுதலை அமைப்பில்சேர.


*பெண்மை..*

தெரிவது உனக்கு அவள் கண்களில்

வண்டும் மீனும் பூவும்

தெரிவதில்லை கண்ணீர்.


*வெறி..*

எரியவில்லை அடுப்பு சேரியில்.

போராடினோம்…

எரிந்ததுஅடுப்பல்ல-சேரி.



*சாமி..*

எங்கள் குடிசையில்

அடிக்கடி சாமி ஆடுவாள்

அம்மா ஏனோ தெரியவில்லை

அன்றும் இன்றும்

குடிசைக்கே வருகிறது சாமி

மாடிக்கே போகிறது வரம்.

Wednesday, October 14, 2009

என்றோ எழுதிய கவிதை - 7

"என் மீது குற்றமாம்...
சிலர் கூவித் திரிகிறார்கள்..
விட்டுத் தள்ளு அவர்களை...

சேற்றை அள்ளி வீசுவதாய்
நினைத்துக்கொண்டு
கைகளைச்
சேறாக்கிக் கொள்பவர்கள்!"

அற்புத கணங்கள்!

பள்ளத்தாக்கினின்றும் சுழன்று எழும்
மேகப்புகை போலும் என்
எண்ணங்கள்....

கள் உண்போர்
களைப்பாறுதலும்
காய் நகர்த்தி
சூதாடுதலும்
பின்னிரவின்
நிழல் காரியங்களும்
அவ்வப்போது நிகழ்ந்தாலும்...

காய்ந்த காக்கை எச்சம்
கண்களில் சீற்றம்
கை உடைந்த ஐய்யனார் சிலை!

வருடங்களாகியும்
வாய் மூடாமல்
வாசலில் நிற்கும்
குதிரைகள் மட்டும்
துணையாய்.. ..

கேட்பாரற்றுக்கிடக்கும்
ஊரின் எல்லையில்!

வாழ்க்கை நீரின் வட்டத்தில்
வளைந்த தென்னையினின்றும்
குதித்து மறைந்த சிறுவர்கள்...

வெற்றிலை இடிக்கும்
கிழவியின் வயோதிகம்
உணர்த்தும்
காய்ந்த அரசமரச் சருகுகள்...

இயல்பு மறந்து
புரிதலற்றுப்போகும்
பொய் முகங்களின்
வாழ்க்கை
கனவுகளின் சுவாசத்தில்...

ஆசுவாசம் தொலைத்து
சுயம் தேயும்
அவசர வாழ்க்கையிலும்
அவ்வப்போது நிகழும்
இத்தகைய அற்புத
கணங்கள்!

Sunday, October 11, 2009

என்றோ எழுதிய கவிதை - 6

'மாற்றான் தோட்டத்து
மல்லிகை மணக்கும்!'
என்கிறாயே...
வெட்கமாயில்லை?!
அவன் முகர்ந்த
எ(மி)ச்சம்தானே உனக்கு!

Saturday, October 10, 2009

காதல்...!

சந்திர பார்வை,
நிசப்த நடுநிசி,
கீற்றுகளோடு காற்று
உறவாடும் வேளை,
ஊரே உறங்கிக்கொண்டு...
நான் மட்டும் விழித்துக்கொண்டு..

அறியா வயதில்
ஆராயாமல் வந்த காதல்...

நினைத்துப் பார்க்கிறேன்,

விதை ஒன்று
பட்டென்று முளைத்து,
பளிச்சென்று சிரித்து
பசுமை காட்டுமே...
அது போலத்தான்
உன் நினைவுகளும்...

கலர் கலராய்க்
கண்ட கனவுகள்
உன் நினைவில் இருக்குமா????

எப்பொழுதும் இல்லையென்றாலும்
எப்போழுதாவது நினைத்துக் கொள்வாயா???

ஒரு காலத்தில்
உன்னை முழுதுமாய் அறிந்தவன் - இன்று
உண்மை அறியமுடியாமல்...

எனக்குள் இருக்கும்,
எதிர்பார்ப்பின் ஏமாற்றங்கள்
உனக்குள்ளும் இருக்குமா???

விடை இல்லாக் கேள்விகள்தான்
வாழ்க்கையா??

முடிவில்லா வினாக்களில்
தான் வாழ்க்கை யென்றால் - இந்த
கவிதைக்கு மட்டும்
முடிவெதற்கு???

என்றோ எழுதிய கவிதை - 5

அவள் என்னைப் பார்த்து,
'நான் அழகா?' எனக் கேட்டாள்!

நான் சொன்னேன்
'தூரத்திலிருந்து பார்க்கும்போது
நீ அழகுதான்,
அருகில் வந்தபிறகுதான் தெரிகிறது
உனக்கும் அழகுக்கும்
தூரமென!'

ரஜினிக்கு ஒரு பாட்டு!

வெற்றிக்கனி எட்டி பறிக்க
எம்பத்தான் வேண்டும்
வியர்வைத்துளி பூமியிலே
சிந்தத்தான் வேண்டும்
சோதனையை முட்டித்தள்ள
நிமிரத்தான் வேண்டும்
வேதனையை விட்டுத்தள்ள
சிரிக்கத்தான் வேண்டும்

இமையிலே உறக்கம் அழுத்தும்போதும்
முழிக்கத்தான் வேண்டும்
வழியிலே தோல்வி வருத்தும்போதும்
ஏற்கத்தான் வேண்டும்
இடையிலே தடைகள் வரும்போதும்
தாண்டத்தான் வேண்டும்
உன் அடியிலே பூமி நழுவும்போதும்
நிற்கத்தான் வேண்டும்

தலையில கனம் இல்லாம
இருக்கத்தான் வேண்டும்
மனசுல திடம் என்றுமே
இருக்கத்தான் வேண்டும்
உறுதி ஒளி கண்ணுக்குள்ளே
மின்னத்தான் வேண்டும்
வெற்றிப்பசி வயிற்றுக்குள்ளே
கிள்ளத்தான் வேண்டும்
நம்பிக்கை பலம் புஜத்தினிலே
தெரியத்தான் வேண்டும்
இலட்சிய இலக்கை இறுதியிலே
அடையத்தான் வேண்டும்

(ரஜினியின் சிவாஜி தான் இன்று ஊரெங்கும் ஒரே பேச்சு. சரி நம்பளும் ரஜினி சார் பாடுகிற மாதிரி எழுதலாம்னு ஒரு முயற்சி !! பாட்டுல முதல் வரி எல்லாம் ரஜினி பாடுகிற மாதிரியும் அடுத்த வரி எல்லாம் பக்கத்துல கூட்டமா மற்றவர்கள் எல்லோரும் CHORUS பாடுகிற மாதிரியும் யோசித்தேன், அதன் விளைவு தான் இந்த பாடல்!)

Thursday, October 8, 2009

என்றோ எழுதிய கவிதை - 4

அதிகாலை விழித்து,
அரனைப் பூசித்து,
இரையைப் புசித்து,
பஸ்ஸில் நெரிந்து,
வியர்வை வழிந்து,
அலுவலகத்துள் நுழைந்து,
வேலைக்குள் அமிழ்ந்து,
'ஸார்' எனப் பணிந்து,
மதியம் உணவை அடைத்து,
மாலை மறந்து,
இரவுப்பறவையாய்ப் பறந்து,
வீட்டினுள் அடைந்து,
'அம்மாடி' என விழுந்து,
நிமிரும் பொழுதில்

முகம் மலர்ந்து,
சீண்டிச் சிரித்து,
ஆறு மாத மழலை தவழ்ந்து
பாதம் பிடிக்கையில்,
இயந்திர வாழ்க்கை இழந்து,
இயல்பாய் ஆகும் தருணம் அது!

நான்?

விடை தெரியா வினாவொன்று
வழி தெரியாமல் உள்ளிருக்க,
வடிகாலின்றி எண்ணங்கள்
மனத்திரையில் மன்றாடும்.

'நான்' என்று ஏதுமில்லை;
பிறர் சொல்லும் 'நான்' நானில்லை;
மனம் கூறும் 'நான்' பிடிக்கவில்லை;
எந்தையும் தாயும் உருவாக்கிய
'நான்' தெரியத்தான் இல்லை!

பல வடிவெடுத்ததில்
என் உருவம் மறைய,
என்னை நானே தேடுகிறேன்;
என்னை நானே எதிர்க்கிறேன்!

'என்'னை 'நான்' பார்க்கும் கண்ணாடி
புகையாய் இருக்க,
பனிமூட்டம் தானோ?!
கை வீச மறைந்திடுமோ
'நான்' யார் என்று?!

Wednesday, October 7, 2009

என்றோ எழுதிய கவிதை - 3

பின்னலை முன்னே இட்டு
பேசித் தள்ளும்
அவளைப் பார்க்கையில்....

தத்தித் தத்தித் தாவும்
குழந்தையாய்....
மனசு!

என்றும் காதல்...

காதல் என்றும் சுகந்தருமே!
உள்மனதைக் கேளு சொல்லிடுமே!

ஏழ்மையிலும் வளருமடி இது!
தூய்மையான கவிதையடி!
கண்களில் வளர்ந்து மனதில் படர்ந்து
உலகை இங்கே வளர்க்குதடி!

உயிரைக் கூட உருவிக் கொண்டோடும்,
பிரிந்த உறவைச் சேர்த்து வைக்கும்,
அன்பாய் அழகாய் மனதை மாற்றும்,
சுவையாய் முழுமையாக்கும்

இங்கு சிரித்திருப்பதும்,
சுகித்திருப்பதும் நம் கையில்
காதலில் வாழ்வோமே,
ஒன்றாய் வள்ர்வோமே...!

காதல் செய்ய இளமையாய் மாறும் மனது,
காதல் கொள்ள மன்னிக்க பழகும் மனது,
பகைமை பொறாமை ஏதுமில்லாமல்,
வெண்மையாய், வெறும் குழந்தையாய் ஆக்கிடும்...

காதல் என்றும் சுகந்தருமே!

Tuesday, October 6, 2009

நீயும்....?!

வெற்று மணலை ஈரமாக்கி,
வாசம் கிளப்பி,
விழிகளை வியக்க வைத்தபின்,
வான் மேகங்கள்
விலகி விடும்! -
நீயும் மேகம்தானோ?!

என்றோ எழுதிய கவிதை - 2

மனிதர்கள் மூன்று வகை...
ஒன்று எண்ணத் தெரிந்தவர்கள்...
மற்றொன்று எண்ணத் தெரியாதவர்கள்...!

அன்றும் இன்றும்

கைகள் உணர்வாய்
மொழிக்கும் மௌனமாய்
காதல் காமமாய்
எழுதும் கவிதையாய்

மயிர்க்கால் அசைவும்
மனசுள் அலைபாயும்
சிரிக்க சிரிக்க
சிலிர்த்துப் போகும்

வெட்கம் விட்டு
விரசம் மறந்து
விரகம் உணர்ந்து
வளர்த்த தீபம்
இன்னும் அணையவேயில்லை!
ஒளியாய்ப் பக்கத்தில்!

நடு சாமத்தில்
'தொம்' என்று கால்போட்டு
தூக்கம் கலைக்கும்
என் வீட்டுக் கொழுந்து!!

தாலாட்டி மடி ஆடும்,
நாவும் பாட்டு பாடும்,
மனம் மட்டும்
அன்றைய நினைவை அசைபோட்டு,
என்றும் எனக்கு அழகாய்,
உறங்கும் மனைவியைப் பார்த்து,
பெருமூச்சு விடும்!
மடி ஆட்டிக்கொண்டே!

Sunday, October 4, 2009

உணர்வு

உதயத் தீயில், மணங்கமழ் மலர் புன்னகைக்கும்,
மதியம், தூரத்துச் சாலைகள் கண்ணீர் சிந்தும்,
சந்தியம், தென்றல் பூப்பெய்தும்,
இரவுதனில் தீச்சுடர் சிறையில் சோகமாகும்;

வளர் மழலை இன்பந்தந்து, இடர் நினைவுறுத்தும்,
பருவ மகளிர் அழகு கவர்ந்து, பயமுறுத்தும்;
வளர்ந்த வயதும், அனுபவங்கண்டு இன்பம் தள்ளி வைக்கும்
மூப்பெய்தும் பருவமும் மரணம் தெரிந்தும் இன்புறும்!

கலவைகள் கோர்வையிங்கு
ஒன்றின் ஜீவிதம் உணவாம் மற்றதிற்கு;
தள்ளி வைத்து வசித்தல் ஞானம்,
உள் வைத்து இருத்தலோ சூன்யம்.

என் காற்று...என் (சு)வாசம்!

காற்றே இங்கு வீசாதே! காதல் தீயை மூட்டாதே!
பிரிவின் ராகம் பாடாதே! சோக கீதம் மீட்டாதே!

உன் பிரிவுக்காற்றை என்னுள் வைத்து
நான் சுவாசிக்க மறந்தாலும்
உன் நினைவுக்காற்று என்னுள் வந்து
என்னை சுவாசிக்க வைத்திடுமே!

உன் வாசம் நானெடுத்து ஒரு நேசம் வித்திட்டேன்
என் சுவாசம் நீயெடுத்து ஒரு வாசம் வித்திட்டாய்
இனி வீடெங்கும் மணம்தான் என்றென்றும் வீசி
என்னோடு தினம் தினம் பேசிடுமே!

ஓடி ஓடிக் காதல் நான் புரிந்ததேன்?
இன்று பிரிந்து நானும் வருந்துவதேன்?
தேடித் தேடி காற்றும் நம்மைப் பார்ப்பதேன்?
புயல் காற்றும் என்னுள் வேர்ப்பதேன்?

இன்றும் கூட முதிர் காதல் என்னுள்ளதோ?!

என்றோ எழுதிய கவிதை - 1

இருளான எதிர்காலம்
என்முன்
பிரகாசமாய் நிற்கிறது!