Wednesday, December 29, 2010

காதலா காதலா

காதலா காதலா இது தான் காதலா
தன்னை ஈதலால் தந்தது காதலா
தனை ஈர்த்ததால் ஈன்றது காதலா
காதலா காதலா இது தான் காதலா

சேர்தலால் கொண்டது காதலா
நீ அன்றி தேய்தலாலானது காதலா
ஊடலால் ஊர்ந்தது காதலா இல்லை
கூடலில் சுரந்தது காதலா

இல்லத்தால் ஆனது காதலா உனை
உள்ளத்தால் ஏற்றது காதலா
தாழ்தலால் வளர்ந்தது காதலா நீ
ஏற்றதால் படர்ந்தது காதலா


பருவத்தின் களவாய் காதலா
அருவத்தின் அளவாய் காதலா
முதுமை ஆனதால் காதலா உன்
பதுமை மனதால் வந்தது காதலா

உன் உணர்வே தான் காதலா
உள்ளுணர்வே தான் காதலா
நீயில்லா சாதலும் காதலா
சாதலில் வாழ்தலும் காதலா

காதலா காதலா இது தான் காதலா

Sunday, December 12, 2010

பேருந்து கவிதைகள் - 1

குளிரூட்டப்பட்ட பேருந்தின்
எதிர் இருக்கையில் அவள்!


இப்படித்தான் பாந்தமாய்
உடுத்த வேண்டும் என்கிறது
அவளது சேலை!


கூந்தலை பின்னலிட்டு,
காதுகள் கேட்கும் சங்கீதத்தைப் பொருத்திவிட்டு,
அளவான ஒப்பனையில்
அவளைப் பார்க்கும்போது
ஏனோ எனது மனைவியின் நினைவு!


காலை நேரச் சமையலறையில் படும் அவதி...
என் பெற்றோருக்கு முகம் கோணாத பணிவிடை...
அலுவலகத்திற்கு நேரத்தில் இருந்தாக வேண்டிய கட்டாயம்...
வேலை முடித்து வீட்டிற்கு வந்தவுடன் துவங்கும் வேலை...
மழலைகளுக்கு நேரம் ஒதுக்கி பாடத்தைப் பதிவு செய்யும் நேர்த்தி..
சில இரவுகளில் என்னுள் மிருகத்திற்குத் தீனி போட வேண்டிய நிர்ப்பந்தம்...
பெண்ணே! இவை உனக்கும் உண்டா?


இத்துணை சுமைகள் இருந்தும்,
உடையில் தென்படும் ரசனை,
புருவத்தை உயர வைக்கிறது,
கண்ணை விட்டு அகலத்தான் மறுக்கிறது!


எனது பார்வையின் குறுஞ்செய்தியைப்
புரிந்து கொண்டாளா என்ன?
மெலிதான புன்னகை அவள்
இதழோரம் பூக்கிறது!


ஒரு பெண்ணை இப்படியும் பார்ப்பது,
வயதாவதால் வந்த கண்ணியமா?
இல்லை எனக்கும் ஒரு பெண்ணிருக்கிறது என்பதாலா?


நினைக்கத் துவங்குமுன்
நிறுத்தம் வந்து விடுகிறது!
அவளும் நானும்
வெவ்வேறு பேருந்துகளில்
பயணத்தைத் தொடர்கிறோம்!

Saturday, November 6, 2010

தீபாவளி!

தீப ஆவளி வைத்து லஷ்மியை வரவேற்க
ஒரு திருநாளாம்
நரகாசுரனை கொன்ற நன்னாளாம்
புத்தாடை ஒன்று வீட்டில் ஒவ்வொருவருக்கும்
வாங்க வேண்டுமாம்
எண்ணெய் தேய்த்து காலையில் மூழ்கி
திண்பண்டம் உண்டு வெடி வெடித்து கொண்டாடி
பெரியோர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று
என நீண்ட பட்டியலை
பெரியவர் ஒருவர் விவரித்திருந்தார்
நடுரோட்டில் மற்றோருவரிடம்.


கேட்டிருந்த
பிளாட்பார சிறுவனுக்கு பல கேள்வி
லஷ்மி யார், புத்தாடை என்றால் என்ன
காலையில் முழ்கி என்றால் எங்கே
திண்பண்டம் என்பது என்ன
பெரியோர் என்றால் யாரவர்கள்?


விடை தெரியா வினாவோடு
பார்த்தவனுக்கு வெடி சத்தம் மட்டுமே புரிந்தது
பிளாட்பார வாசத்தில் தினமும் தீபாவளி
கார்ப்பரேஷன் வசதியில் அவனுக்கு
இன்றும் உண்டு!




மத்தாப்பாய் வெடியாய்
பூச்சரமாய் தரை சக்கரமாய்
புஸ்வாணமாய் இறுதியில்
புகையாய் காசும் காலமும்
கரையும் தீபாவளியில்
வெடிச்சத்தம் போல்


அம்மா அப்பாவுடன் இருப்பது மட்டும்
நிற்குது நினைவில்!



கவலையும் புகையாய் கரையும்
வெடியும் சத்தமாய் விடியும் காலமும்
முன் நிற்குது
இனி தீபாவளி காலை மட்டுமல்ல
என்றும் இனிப்பாய் இருந்திடும் என
இருள் விலக வெடி வைப்போம்
மனக்குறை அகல புகை வாசம்
நுகர்ந்து முன் நகருவோம்
காலம் மத்தாப்பாய் பூச்செரிக்கும்
சேர்ந்தே நாமும் சிரித்திருப்போம்!


உங்கள் யாவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள்!

Thursday, September 30, 2010

அயோத்தி!

அயோத்தி

அல்லாவுக்கும் இராமருக்கும்
உலகமே சொந்தம்;
அயோத்தியில் மட்டும் அவர்களை
சிறை வைக்க நிர்ப்பந்தம்!

வழக்கு

அறுபது ஆண்டு போராட்டம்
கண்டும் தீரவில்லை வழக்கு
நிலுவையில் இருப்பது
நீதி மட்டுமல்ல, கடவுளும் தான்!

சுதந்திர போராட்டம்

அறுபத்திமூன்று ஆண்டு சுதந்திரம்
கண்டும் தீரவில்லை போராட்டம்!
அன்று விதேசிகளிடம், இன்று
சுதேசிகளிடம்!

Wednesday, September 8, 2010

தானியத்துரோகம்!

துரோக அரசியல்
சட்டசபையில் விவாதிக்கும்
தானியம் அழுகிக்கொண்டிருக்கும்
இத்தேசத்து பட்டினி மனிதர்களோடு!

Tuesday, September 7, 2010

இலவசம்!

எல்லாம் கொடுத்தாகி விட்டது
தேர்தல் வாக்குறுதியாய்;
அடுத்த தேர்தலில் காற்றை இலவசமாய்
தரும் திட்டமாம்!
இல்லாதது தருவதாய் சொன்ன போது
பயப்படாத மனிதன் பயப்படுகிறான்
இருப்பதும் போய்விடுமோ என்று!!

Monday, September 6, 2010

விடியலைத்தேடி

காஷ்மீரில் ஆயுதங்கள் எல்லை தாண்டும்;
சீன சாத்வீகம் எல்லையையும் ஊடுருவும்;
எல்லையில்லா இந்திய வளத்திற்கு
எல்லையிலே தான் தொல்லை!

விடியலைத்தேடும் என் தேசமோ
அரசியல் போர்வைக்குள்!

Sunday, September 5, 2010

சென்னையில் மழை!

சாலைகளின் குளியலில்
வாகனங்களின் மறியல்
அலுவலக போராளிகளின்
தாமத வழிகாட்டி
கண்ணீர் குவியலில்
இயற்கைக்கு புத்தாடை
செந்நீர் குட்டையாய்
மகனுக்கு குளத்தின் அறிமுகம்
இடைவிடா தடைதரும்
மின்சாரத்தோழன்
பள்ளங்களை மறைக்கும்
சமதர்மசான்று
கேட்காமல் வரும்
விடுமுறை விண்ணப்பம்
இது சோம்பேறியாக்கும்
தந்திரம், வானிலை
அறிக்கையாளரை என்றும்
ஏமாற்றும் மந்திரம்

Tuesday, August 17, 2010

சுதந்திர தினம்!

வித்தகம் பயின்று தேசம் விட்டு
விதேசம் வளர்த்தோம் வளர்ந்தோம்
தன்னாடு தழைக்க நாமின்றி நாடு கடந்து
பிழைத்தோம்

தன் தேசம் சொர்க்கமறியாது
விதேசம் சொர்ககமானது
என் சோகம் மறந்து போனது
மறத்து போனது காலம் கடந்து போனது
அனுபவத்தோடு வயதும் கூட
தாய் நாட்டுப்பற்று பெற்றவர் ரூபத்தில்
என்னை துரத்தி இன்று
என் தேசத்தில் நான் கண்டேன் சுதந்திர தினம்

என் தேசசுவாசத்தில் கொடியேற்றி
என் சுவாசம் மறந்து போகும் சுகம் கண்டேன்
ஈரைந்து ஆண்டு கடந்து
தேசியாய் நான் உடலில் படாது
கொடி குத்தி கொண்டேன் சட்டையில்
சட்டையில் குத்திய ஊசி மனதில் ரணமாய்
பாடும் தேசப்பாட்டு நானுமறிவேன்

இது போல் கொடியில் அன்னையையும்
தந்தையையும் காணும் பல கோடி
விதேசசுவாசிகளுக்கு வேண்டிக்கொண்டேன்

இனி என் போல் பல தேசிகள் விதேசம்
விட்டு நம் தேசம் வளர்க்க வருவாரிங்கே
வளருவாரிங்கே

இனி இந்திய கொடி பட்டொளி வீசி பறக்கும்
என் போல் இருப்போருக்கு
கண்ணில் இரு துளி ஈரம் விட்டு படபடக்கும்
இந்திய மண்ணில் யாவருக்கும் இடமிருக்கும்
தேச சுவாசம் நுகர நினைப்போருக்கு சுகமிருக்கும்

ஜெய்ஹிந்த்…!

Saturday, June 26, 2010

யாதுமாகி!

நேற்றாகி, இன்றாகி, பொழுதாகி,
என் ஆலம்விழுதாகி, வேராகி,
எனை சுமந்து,
இன்று நான் சுமக்க விரும்பும் தேராகி,
நிற்கும் தெய்வமாகி,
தொழுது பெரும் வரமாகி,
அது கிட்டா சோகமாகி,
தரும் நினைவுமாகி,
என்னுள் யாதுமாகி நின்றாய்
என் தாயே!

Thursday, June 24, 2010

ஜனனம்!

நிதம் பிறக்கும் பிறவி நான்,
இருட்டு கருவறையாய் உறக்கம்!
விழிக்க ஜனனம், எனக்கிது
தினமும் நடக்கும் பிரசவம்!

Friday, June 4, 2010

கவலை

இறைவனிடம் வரம் வேண்டி நின்றேன்
இருக்க நிலம் தந்தான்;
பசி தீர உணவும், தாகந்தீர தண்ணீரும்
கூரையாய் வானும் தந்து உபசரித்து,
'வேறென்ன வேண்டும்' என்றான்.

யாவும் பெற்ற பெருமிதத்தில்,
'என்றும் நிலையாய் உன்னை
நினைத்திருக்க வேண்டுமென்றேன்!'

கவலை தந்தான்!!

Saturday, March 27, 2010

தொலைபேசி!

உறவுகள் தொலையாதிருக்க
குரல்வழியாய்
தூரத்தை மறைக்கும்...

வைத்த பின்
தொலைவை இன்னும் தொலைவாக்கும்!!

Tuesday, March 23, 2010

என்றோ எழுதிய கவிதை - 17

நான் யார்?

உயிரா?
உயிர் உள்ள உடலா?
உயிரும் உடலுமா?

உயிர்த்தது "நான்" என்றால்...
உதிர்வதும் "நான்" தானே?
எனில்...
உயிரில்தான் "நான்"!

உடலின் தோற்றம் "நான்" என்றால்...
உடல் மறைவதும் "நான்" தானே?
எனில்...
உடலில்தான் "நான்"!

உயிரும் உடலும் "நான்" என்றால்..
உயிரோடு உடல் போவதும் "நான்" தானே?
எனில்..
உடலும் உயிரும்தான் "நான்"!

யோசித்து பார்தததில் தவறு தெரிந்தது...
"நான்" என்பது "நான்" அல்ல...
எல்லாம் வல்ல "அவன்" என்று!

Tuesday, March 16, 2010

என்றோ எழுதிய கவிதை - 16

அருகில் வந்து
என் தலையைக் கலைத்து
அழகு காட்டிச் செல்லும்
அவளைப் பார்க்கையில்...

தத்தித் தத்தித் தாவும்
குழந்தையாய்...
மனசு...!!

Saturday, March 13, 2010

காதல் அந்தாதி!

கருவாய் காதல் உள்ளத்துள்
உள்ளத்து காதல் உணர்வாய் ஜனனம்

ஜனித்ததும் பருவம் கண்டது
கண்டதெல்லாம் சுகமானது

சுகமானது மட்டும் உணர்வானது
உணர்வில் அவளன்றி வேறேதும் அறியாதது

அறியாததெல்லாம் தெரிவித்தது
தெரிந்ததெல்லாம் புதிதானது
புதிதெல்லாம் புதிரானது
புதிரெல்லாம் விடையானது

விடை கண்டும் காதல் வினாவாகும்
வினாவிற்கு விடை தேடும் மனது!

Thursday, March 11, 2010

மனைவி!

இளமையில் முதுமையின் அனுபவந்தந்து
முதுமையில் இளமையின் சுகந்தருவாள்

இருக்கும் வரையில் இல்லாதிருப்பாள்
இல்லாதிருக்க ஏங்க வைப்பாள்

வாழ்வோடு இழைந்தது அறியாது
நாம் இருப்போம் அவளோடு
அவளன்றி வாழ்வொன்று இல்லாதுபோமோ?

அவளற்ற மெளனம் கொல்லும்
அவளோடு மெளனம் என்னை வெல்லும்

எல்லாம் அறிந்தும் ஊடல் தொடரும்
அவளோடு என் உலகம் வளரும் !!

Monday, March 8, 2010

Women's Universal Message to Men!

I do NOT want to be a FEATHER IN YOUR CAP;
NOR I want to be a PATCH IN YOUR HEELS;
What I NEED is
EQUAL / FRIENDLY RELATIONSHIP FOREVER!!

P.S: Are you listening to me?!

Thursday, March 4, 2010

தாயின் பிரிவு

ஐந்து வயதில் முதன்முறையாக
அழுதேன் தாய் என்னை
பள்ளியில் விட்ட பொழுது

இருபதுகளில், நானே
என்னை வேலையில் தொலைத்தபொழுது

இப்பொழுது மீண்டும்
என் தாய் தொலைபேசியில்
பேசும்பொழுதெல்லாம்...

நான் தனியாய் வெளிநாட்டில்
தொலைந்துள்ளபோது…!

Monday, March 1, 2010

என்றோ எழுதிய கவிதை - 15

காலேஜு போவுறப்போ, இன்னா நோட்டாயிருந்தாலும் மொத பக்கத்துல பிள்ளையார் சுழியோட, நடுவுல சின்னதா ஒரு கவிதை இருக்கும். சில சமயம் ஸீரியஸாவும், பல சமயம் லொள்ளாவும், அந்த வயசுக்கேத்த எதிர்பார்ப்போட, ஏக்கங்களோட இருக்கும். அப்படி நான் எழுதிய ஒரு கவிதை............

பாவை நீ
பூவை வைத்தாய்.......
பொட்டும் வைத்தாய்...
நெஞ்சை மட்டும்
ஏன் விட்டு வைத்தாய்?!!

புரியாதவங்களுக்குச் சுளுவாக

பாவை நீ
பூவை வைத்தால் கூந்தலுக்கு அழகு...
பொட்டு வைத்தால் நெற்றிக்கு அழகு...
நெஞ்சில் என்னை வைத்தாலோ அழகோ அழகு!

திருவல்லிக்கேணி •ப்ரெண்ட்ஸை பாத்துட்டு, 45B பஸ்ல, (ஈவினிங்) காலேஜ் போற ரூட்டுல (தொங்கிகினே) நோட்டை ரோட்ல விட்டுட்டேன்! ஸ்லோவா பஸ் போனதுல எப்படியோ இறங்கி நோட்-ஐ தேடி (ஓடி!) வந்தேன். அதற்குள் யாரோ எடுத்து கைல வெச்சிருந்தாங்கோ.

டேங்க்ஸ் சொல்லி 'ஜுட்'றதுக்கு முன்னாடி, எடுத்து வெச்ச மகராசனோட கிண்டல் கேள்வி "நோட்புக்கை(யும்) ஏன் விட்டு வைத்தாய்?!"

Saturday, February 27, 2010

சுஜாதா!


மரபுக் கவிதைகளுக்கு நடுவே
ஒரு புதுக்கவிதை!

நெடிதுயர்ந்த அடர்ந்த மரங்களுக்குள்
ஒரு போன்ஸாய்!

வீட்டுக்கு வீடு ஜன்னலில்
குடி புகுந்த புது நிலவு!

ஞான தாகத்தை லேசாய்
தீர்த்த பானகம், பருகிட
மீண்டும் தாகம் தரும் அமுதம்!

உன் புத்தகங்கள் படித்தாலும் ரத்த அழுத்தம்
படிக்காவிட்டாலும் தான்!

உன் எழுத்துக்கள் வந்தது
நன்கறிந்த தமிழ் வார்த்தையில் தான்
ஒவ்வொரு முறையும் புதுமணப்பெண்ணாய்!

சங்க இலக்கியம் போல் நீ
தந்தது தொழில்நுட்ப இலக்கியம்
பாமரனையும் பட்டதாரியாக்கினாய்!
பட்டதாரியையும் பாமரனாக்கினாய்!!

பாதரசம் போல் உன் படைப்புகள்
படிப்போரின் திறன் பொறுத்து
உருவம் பெறும்!

பழரசம் போல் உன் கருத்துக்கள்
ருசிப்போரின் ரசனை பொறுத்து
ரசிப்பு தரும்!

அருவம் ஆகி நின்றபோதும்
உருவமாய் இருக்கின்றாய்
பல நூல்களில்,

உன்னை பத்திரமாய் வளர்த்து வருவேன்,
என் அகத்தில் நூலகமாய்,
வளர்ந்த பின் என் பிள்ளை
படிக்க கொடுப்பதற்கு!


எழுத்தாளர் திரு சுஜாதா அவர்கள் மறைந்த வருடம் எழுதப்பட்டது.
திரு சுஜாதா நினைவு நாள் - 27/02/2010.

Thursday, February 25, 2010

பசுமைப் புரட்சி!

கல்லும் மண்ணுமாய் நகரங்கள்
மழையும் பசுமையும் காணவில்லை!

தன்னுயிர் காக்கும் மாந்தர்கள்
புத்துயிர் தரும் தாவரம் வளர்க்க
இன்றே புது நீதி செய்குவோம்!

இலை தழை வெட்ட ஓராண்டு சிறை!
செடி கொடி கொய்தால் ஆறாண்டு சிறை!!
மரம் வெட்டினால் ஆயுள்!!!
காடு தோப்பு அழித்தால் மரணம்!!!!

தன்னுயிர் காக்க தன்னோடு தாவரம் வளர்ப்பர்
பசுமை தழைத்தோங்கும்
தரணி குளிர்ந்துபோகும்
ஓவ்வொரு புது ஜனனத்தில் ஒர்
மரம் நடுவோம்!

இனி வரும் தலைமுறை
பசுமையில் வாழ புது விதி செய்குவோம்!

Saturday, February 20, 2010

கனவும் நிஜமும்!

என் மரணத்தை நானே
கண்டேன் கனவினில்

கண் மூடி கால் நீட்டி
நடுக்கூடத்தில் நான்!

இதோ சில மணியில்
நான் பஸ்பமாவது உறுதி!

சுடும் நெருப்பின் பயம்
கனவை கலைத்தது!

இன்று கனவில், நாளை
நிஜத்தில்!

இடையில் கனவாய் நிஜ
வாழ்க்கை!!

Wednesday, February 17, 2010

காத்திருந்தேன்!

காத்திருந்தேன் நான் காத்திருந்தேன்
கானல் நீரும் கண்ணீராகும் வரை
காத்திருந்தேன்
என் நிழலும் இருளில் மறையும் வரை
காத்திருந்தேன்
நிலவும் கூட கதிராகும் வரை
காத்திருந்தேன்
அல்லி மொட்டும் மலராகும் வரை
காத்திருந்தேன்

இராமனுக்காக சீதை அன்று
காத்திருந்தாள்
அந்த சீதைக்காக இராவணணும்
கூட காத்திருந்தான்
கடமைக்காக கர்ணணும் தானே
காத்திருந்தான்
காதல் மடமைக்காக நானும்
இங்கே காத்திருந்தேன்

உள்ளத்தில் உன்ன வைச்சு
காத்திருந்தேன், என்
உயிருக்குள்ளே ஒளிச்சு வெச்சு
காத்திருந்தேன்
என் ஆயுளில் பாதி உனக்களிக்க
காத்திருந்தேன்
இப்போ மிச்ச மீதி ஆயுளும் போக
காத்திருந்தேன் நான் காத்திருந்தேன்

Sunday, February 14, 2010

காதலர் தினம்!

யத்தனிக்க தித்தித்திருக்கும்
எட்டிப்பிடித்து சுவைத்திருக்கும்
நினைவை பகிர்ந்திருக்கும் காதலர் தினம்
நிதம் நிதம் புதுமையாய் ஆகும் உலகு
காதலருக்கு ஒவ்வொரு நாளும் காதலர் தினம்

Wednesday, February 10, 2010

யாசகம்

ஓட்டையான ஒடெடுத்து
ஓடி வந்தேன் யாசிக்க
போட்டெதெல்லாம் போதவில்லை
போன இடம் தெரியவில்லை

கேட்கத்தான் யாருமில்லை
கேட்டுத்தான் பலனுமில்லை
கொடுத்தாலும் போதவில்லை
கொண்டு செல்ல இடமுமில்லை

சேதி சொல்ல யாருமில்லை
தேதி சொல்ல ஆளுமில்லை
முடிவுல அவனுமில்லை
முயற்சியில மீளவில்லை

அனுபவத்தை தேடவில்லை
அனுபவமா “அவன” பார்க்கவில்லை
தேடுதலில் சளைக்கவில்லை
தேடுதலே அவனென புரியவில்லை!!

Sunday, January 31, 2010

என் நிலவே!

என் காதல் வானில் ஒரு வெண்ணிலவே
அது வளர்ந்து வந்தது என் நெஞ்சிலே
தாயின் கனிவை கண்டதுன் உறவிலே
அது சேயாய் வளர்ந்த்துன் கருவிலே

ஊடல் மேகம் வந்ததென் சொல்லிலே
கூடல் மழையாய் பொழிந்ததுன் கண்ணிலே
காதல் பசலையும் உன் பிரிவிலே
அது தீரும் நேரமோ நான் உன் அருகிலே

உன்னால் வந்த காதல் நோயிலே
தேய்பிறையாய் தேய்ந்தேனடி பெண்ணிலவே
நோயே மருந்தாம் வள்ளுவன் சொல்லிலே
உன்னில் நான் தெளிந்தேனடி பொன்னிலவே

என் இரவின் இருள் நீக்கும் வெண்ணிலவே
பகலிலும் தஞ்சம் புகுந்தது என் வீட்டினிலே
வானில் தேய்ந்து வளரும் வெண்ணிலவே
என்னோடு இருக்கையிலே என்றும் முழுநிலவே…

Friday, January 29, 2010

ஊடல்!

விண்ணோக்கும் மண்நோக்கும்
மனம்நோக்கா பிரிந்த நட்பு
தானேங்கி கண் நோக்கி மனம் நோக்கும்
காதல் பசலைவாழ் கைசேரா ஊடல்

Wednesday, January 27, 2010

புகைத்தல்!

மதி மயக்கி தொடரும் விநாடி பயணம்
தன் முடிவை தானே தேடும் விரலிடை மரணம்!

Friday, January 15, 2010

என்றோ எழுதிய கவிதை - 14

நிலவினுள் களங்கம்...
உன் மனதில்...நான்!

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

அன்பு நெஞ்சங்களுக்கு,

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

ஜே கே அவர்களின் இந்திய விஜயம், கேயார் அவர்களின் பணிப்பளு, பருப்பு ஆசிரியரின் தீர்த்த யாத்திரை காரணங்களினால் 'பதிவு' பக்கமே வர முடியவில்லை...!

தங்களின் மேலான படைப்புகளையும் படிக்க இயலவில்லை! இழந்த தருணங்கள் இவை!
இதோ வந்துவிட்டோம்!

என்றும் அன்புடன்,
இன்றைய கவிதை அன்பர்கள்