Thursday, June 30, 2011

தொடு வானம்

அருகில் வர, தூரம் போய்...
தூரம் போக, அருகில் இருப்பதாய்...

உன் காதல் தொடுவானத்தில்
தினமும் தொலைந்து போகிறேன்!!

Wednesday, June 29, 2011

நவீன பசலை!

கட்டிய கை சற்றே அகல,
அவ்வளவில் வந்ததாம்
பசலை அக்காலத்தில்!

பேசிய கைபேசியை
வைத்தவுடன் வந்திடுமாம்
பசலை இக்காலத்தில்!!

Tuesday, June 28, 2011

கொஞ்சம் விட்டு

ஆதியில் கொஞ்சம் விட்டால்
மிச்சமே மீண்டும் ஆதியாகும்!
பசியில் கொஞ்சம் விட்டால்
மீண்டும் பசியாகும்!
பாசத்தில் கொஞ்சம் விட்டால்
நேசம் மிகுதியாகும்!
கோபத்தில் கொஞ்சம் விட்டால்
மிச்சமே சாதனையாகும்!
தாகத்தில் கொஞ்சம் விட்டால்
மீதமே வேட்கையாகும்!
கச்சையில் கொஞ்சம் விட்டால்
மிச்சமே சேமிப்பாகும்!
இச்சையில் கொஞ்சம் விட்டால்
அதுவே மோகமாகும்!
இன்பத்தில் கொஞ்சம் விட்டால்
அனுபவமே ஞானமாகும்!
கொஞ்சமாய் விட்டுவிட,
மீதமே வாழ்வின் ஆதியாகும்!
ஒரு தொடர்கதையாகும்!!

Monday, June 27, 2011

மனையாளின் பிறந்தநாள்

மறதி ஒரு வரம்
என்றே நினைத்திருந்தேன்;
அவளின் பிறந்த நாளை
மறக்கும் வரை!!

மறந்திட்டதை நினைத்தே
சொல்லும் மனது!
சொன்னதே குற்றமாகும்!
குற்றமே வலியாகும்!
வலியே நினைவாகும்!!

நினைவாய் என்றுமிருக்கும்,
அவளின் பிறந்த நாளாய்
மறவாது நினைவிலிருக்கும்!!!

Friday, June 24, 2011

கவிதைக்கு இன்று பிறந்த நாள்! (June 24)


பலமும் பலவீனமும்

முனவர் குணசீலன் அவர்கள் பதிவின் பாதிப்பு

இருகோடுகளாய் இருந்திருக்கும்,
ஒன்றின் அளவே மற்றொன்றின்
அளவுகோலாகும்!

வளர்வதும் குறைவதும்
போலாகும்,
இறுதியில் மனதின்
நிலையாகும்!

Tuesday, June 21, 2011

காதலும் செல்வமும்

இல்லாது ஏங்கியிருக்கும்,
ஏங்கியும் இல்லாதிருக்கும்,
சொல்லாது வந்திருக்கும்,
வந்தும் நிறையாதிருக்கும்,
என்றும் குறைவாயிருக்கும்,
அதுவும் சுகமாயிருக்கும்!!

Monday, June 20, 2011

என்றோ எழுதிய கவிதை - 22

தலையில் வீட்டுக் கடன்...
உடலில் உறவானவரின் கடன்...
நெஞ்சில் நண்பர்களின் கடன்...
உயிரில் உயிரான்வரின் கடன்...
இத்துணை சுமைகளின் நடுவில்...
ஒரு துளி தேனாய்...
இன்றைய கவிதை!

Sunday, June 19, 2011

என்றோ எழுதிய கவிதை - 21

தோழர் ஜே கே 'சொல்லிக்காம கொண்டுக்காம'  போனதால... இதோ இப்ப 'சைடு கேப்ல' நம்ம கவிதை...!

தன்னந்தனியாய் அவள்...
தாகமாய் நான்...!
திகட்டாத தித்திப்பாய் அவள்...
தீயாய் நான்...!
துள்ளலாய் அவள்..
தூண்டில் மீனாய் நான்..!
தெம்மாங்காய் அவள்...
தேனிசையாய் நான்...!
தையலாய் அவள்...
தொட்டு விடும் தூரத்தில் நான்...! - என்றாலும் 
தோல்வியில் முடிந்தது எங்கள் காதல்..!!

Tuesday, June 14, 2011

காதல்வயப்பட்டு

இதழில் கதை
எழுத முற்பட்டு,
இடையில்
என்னையும் சேர்த்தெழுதி,
இறுதியில்
அவள் கதை எனதானது!
என் கதை
என்று இல்லாது போனது!!

Monday, June 13, 2011

காதல் நோக்கு!

முள்ளில்லா கடிகாரம்
கையில் கட்டி,
வாராதிருந்தாலும்
காத்திருக்க வைக்கும்!
வாராத சாலையை
பார்த்திருக்க வைக்கும்!!

இரு கண்களிலும்
வேறு உலகின்றி
காதல் மட்டும்
நிறைந்திருக்கும்!!

Sunday, June 12, 2011

முதுமைக்காதல்

முதுமை முன் நடக்க,
பின் நோக்கி சரி பார்க்கும்;
தன்னவளின் கதி பார்க்கும்!

பார்வையில் வைத்திருக்கும்,
மனதில் சார்ந்திருக்கும்,

சொல்லாது ஒருவர்
மற்றவரில் வாழ்ந்திருக்கும்!

Saturday, June 11, 2011

தன்னை இழந்து...

தன்னை வதைத்து,
பட்டுப்பூச்சி, பட்டாய் அவளை அணைத்தது!

தன்னையே தந்து,
பூக்களும் அவளை அடைந்தன!

தன்னை இழைத்து,
மஞ்சளும் அவளை பொலிவித்தது!

தன்னை சிதைத்து,
மருதாணியும் அவளில் சிவந்தது!

தன்னையே உருமாற்றி,
தங்கமும் அவளை அலங்கரித்தது!

தன்னை உருக்கி,
வெள்ளியும் அவளுக்கு கொலுசானது!

இவை பார்த்து தன்னை இழந்தே,
அவனும் அவளை அடைந்தான்!

Friday, June 10, 2011

காதல் திருமணம்

இரு மனம் ஒன்றிணைந்து,
ஒரு மனமாய் ஆக்கிடும்!
பல மனம் மணமிழந்து,
காதலில்லாதிருத்திடும்!!

விரிசல் முகம் காட்டும்
கண்ணாடியிது,
ஒர் முகம் தேட
பன்முகம் காட்டும்!

எதிரில் கண்ணாடியாய்
இருந்திடினும்
விரிசல் மட்டும்
முகத்தோடு இருந்திருக்கும்
பிம்பமாய்!

அதிலும் காதல்
தழைத்திருக்கும்,
இரு மனம் ஒன்றிணைந்து,
ஒரு மனமாய்!!

Thursday, June 9, 2011

மரணத்தில் மரணம்

மறதியில் நினைவுகள் மரணிக்கும்,
நினைவுகளிலும் மறதி பயணிக்கும்!

பிரிவினில் இணைதல் இருந்திருக்கும்,
இணைதலில் பிரிவு ஒளிந்திருக்கும்!

தோல்வியில் வெற்றி வித்திருக்கும்,
வெற்றியில் தோல்வி விழித்திருக்கும்!

இங்கே மரணத்தில் மரணம் காணும்
முரண் இருக்கும்!

கொள்ளி எரி கொண்டு,
சவப்பெட்டி பொதி கொண்டு,
மானுடர் மரணிக்க,
சுற்றம் மரணம் காணும் சூத்திரம்!

பார்த்தாலே புரியும்,
பார்க்காததில் மறையும் தந்திரம்,
மரணத்தில் மரணம்!

Wednesday, June 8, 2011

பிரிவு

உள்ள வரை
உள்ளவரை
காணாதிருக்கும்!

இல்லாதிருக்க
தேடவைக்கும்!

வரும்வரை
வாட வைக்கும்!

வந்த பின்
செய்வதறியாது
நிற்க வைக்கும்!

Tuesday, June 7, 2011

இல்லாது போகும் தெய்வம்

தீமையும், தவறும்,
தீராத் துன்பமும்
தானிழைத்து,
தானறிந்து வருந்தும்
மனமெல்லாம் தெய்வமே!

அறிந்தும், வருந்தாதிருக்க
தெய்வமே இல்லாது
போகுமே அவர்க்கு!

Monday, June 6, 2011

நிழல் மேகம்

நீல வானை மறைத்து,
கூரை தாண்டி,
சாலை அடைத்து,
வீச்சுக் காற்றோடு,
நிழல் பரப்பி
என்னைக் கடந்து
செல்லக்கண்டேன்!

என் காதலியின்
வருகை போல்!

Sunday, June 5, 2011

தொலைந்த தேடல்

விதையில் வேர் தேடி,
விருக்ஷம் தொலைத்து,
சதையில் சுகம் தேடி,
இன்பம் தொலைத்து,
மமதையில் கெளரவம் தேடி,
ஞானம் தொலைத்து,
சிதையில் மரணம் தேடி,
காரணம் தொலைத்து,

அவசரத்தேடலில்
தன்னையே தொலைத்தது அறிய,
தொலைத்ததெல்லாம் மீண்டும் தேட,
இன்னுமொரு ஜன்மம் வேண்டுமென்றே
இறைவனை தேடிடுவாரே!!

Saturday, June 4, 2011

மரணப் பயணம்!

சமீபத்தில் எங்கள் நண்பர் குழுவைப் புரட்டிப் போட்ட மரணம் அது...காயங்களுக்குத் தன் நாவாலேயே ஆறுதல் தேடும் பூனையைப் போல....எங்களுக்கு நாங்களே சொல்லிக்கொண்ட ஆறுதல்...

ஜே கே! நம் சந்ததியில் துவங்கி விட்டதடா மரணப் பயணம்... உன் கவிதை எனது கண்களை மேலும் பனிக்கச் செய்து விட்டதடா!


-கேயார்

கயவராய் பலர் இப்பூமியில்...
கடுஞ்சொல் ஊனத்தோடு சிலர்...
பழி உணர்ச்சியில் இன்னும் சிலர்...
துரோகியாய் கொஞ்சம் பேர்...
புன்னகையே தெரியாதோர் பலர்...
வஞ்சம் மனதிடை கொண்டோரும் உளர்...
என இவ்வுலகில்
பாவிகளுக்கெல்லாம் இடமிருக்க...

சிரித்த முகமாய், இனிய சொல் பேசி,
கடமைக்கென்று ஊர் ஊராய் திரிந்து,
கண்ணியமாய் வாழ்ந்து,
கடவுளை நம்பினவருக்கேன் மரணம்!

அவர் மரணித்து இல்லாதிருக்க,
அவர்தம் உறவுகள் இருந்தும்,
மரணிப்பது என்ன நியதி?
புரியாத புதிராய் பல கேள்விகள்...

கண்ணீர் துளியாய் இமைகள் பாரம் சுமக்க,
மனது “அத்திம்பேருக்கு”
அவரின் ஆன்மாவுக்கு,
கடவுளிடை சேர்ந்திட,
சேர்ந்தே அவரின்
மனையாளையும்,மக்களையும்,
கடவுளாய்க் காத்திட....
ஆழ்ந்த பாரத்துடன்,
மனமார வேண்டிக்கொள்கிறேன்!