Monday, February 28, 2011

குற்றம் பார்க்கும் உறவுகள்

தன் குற்றம் தானறியாது,
மற்றவர் குற்றம் மறப்பதறியாது,
வாழும் மனிதப் பிரிவுகள்!

Saturday, February 26, 2011

வாழ்க்கை

கண்ணாடி வாழ்க்கை வாழ்கிறோம்,
அதன் முன்னாடி தேயப்பார்க்கிறோம்.
தள்ளாடி ஊர்ந்து போகிறோம்,
முன்னேற்றம் என்ற மாயை ஏற்கிறோம்.

பளபளக்கும் பிம்பம் பார்த்து மயங்கி போகிறோம்,
விரிசலோடு அதை வாங்க பார்க்கிறோம்,
சிதறிப்போகும் துகளாயாகும் தன்மை மறக்கிறோம்,
உதறிப்போகும் நிமிடம் கரைத்து உண்மை உணர்கிறோம்!

இல்லாத நாளை இங்கே விட்டுச்செல்வோமே!
இருக்கும் இன்றை ஏற்றுக்கொள்வோமே!
நடக்கும் நொடியை நமதாக்கிகொள்வோமே!
இன்ப நெடியை நுகர்ந்து வாழ்வோமே!!

Friday, February 25, 2011

பேருந்து கவிதைகள் - 2


எதிர் இருக்கையில் அமர்ந்திருக்கும்
அழகான பெண்ணைத்தான் கேட்க வேண்டும்...

என் கண்களில் தெரிவது
'கயமையா, கண்ணியமா?' என!

Thursday, February 24, 2011

என் உலகம்

அவள் உறங்கையில் இருளுது
என் உலகம்!
அவள் விழிக்கையில் விடியல்
எனக்கு!

இருளில் விழித்திருந்து
பகலில் கனவு,
கனவில் கண்டது ஏதும்
நிஜத்தில் வாராது,

அவளும், அவள் நினைவும்
என்னை சிறை வைக்க,
காதல் என் சிறகாயானது,
என் உலகாயானது!!

Wednesday, February 23, 2011

நம்பிக்கை

பாலைவனத்தின் சோலை,
ஊனத்திற்கு ஊன்றுகோல்,
ஏளனத்திற்கு எதிர்ச்சொல்,
ஊக்கத்தின் அளவுகோல்,
வாழ்வின் பிறப்பு,
வீழ்வின் மறுபிறப்பு,
என்றும் தீரா அமுதசுரபி!

Tuesday, February 22, 2011

பெண்

பூவாய் பெண் பாவாய்
கண்ணாய் கண்ணிண் மணியாய்
என்னை தாங்கினாய்!

மங்கையாய் நங்கையாய்
எனை பெற்றெடுத்தாய்!
தங்கையாய், தமக்கையாய்
உடன்பிறந்தாய், ஆயுளாய் என்னுடனிருந்தாய்!

தாரமாய், ஆதாரமாய்
என்னை கரம் பிடித்தாய்!
என் வாழ்வாய் என் சிரம் தந்தாய்!
வித்தாய் விழுதாய் என் மகளாய்
நீ பிறந்தாய்!
ஆரமாய் பூப்பாரமாய் என்னை
அளந்தாய்!!

சுகமாய் எனக்கிருக்கையில் நீ
அதனில் நிழலாய் இருந்தாய்!
துக்கமாய் எனக்கிருக்கையில் நீ
தூணாய் அங்கிருந்தாய்!!
பிறப்பாய் இறப்பாய் என்னில் நீ
ஆதியாய் அந்தமாயிருந்தாய்!
என் மூலமாய் எனக்கு
வாழ்வாயிருந்தாய்!
என் வாழ்வாய் இருந்தாய்!!

Sunday, February 20, 2011

பெற்றோர்!

இவர்கள் ஆலாயிருக்க
நான் ஆளானேன்;

வேராயிருக்க வளர்ந்தேன்;
தேராயிருக்க வலம்வந்தேன்;
ஊராயிருக்க உலகறிந்தேன்.

விழுதாகி இன்று நான் ஆலாகி
அவர்களின் உலகாயுள்ளேன்!

Saturday, February 19, 2011

அனுபவம்

அனுபவம் அழிதலில் ஆரம்பம்
இளமை அறிதலில் இளமை அழியும்
முதுமை புரிதலில் வாழ்வே முடியும்
புத்தகம் புரிய அதை முடித்தாலே இயலும்
பிறப்பின் இரகசியம் இதுவே
இறப்பில் தான் புரியும்

பயின்றதும் புரிந்ததும் மீண்டும்
கல்வியாகும் அனுபவம் கேள்வியாகும்
அனுபவம் ஞானமாக
தன்னையே அழித்திட அந்த
ஞானம் அனுபவமாகும்

Thursday, February 17, 2011

காதல் – மாற்றம்

சோற்றைக் களையும்
உடையைக் கலைக்கும்
இரவை பின்னுக்கு தள்ளும்
விடியலை முன்னுக்கு தள்ளும்
இரவில் விழித்திருக்கும்
பகலில் கனவு காணும்
நினைவில் வாழ்ந்திருக்கும்
நிஜத்தில் ஒளிந்திருக்கும்
மாற்றமே காதலாகும்
மாறுதலே மரபாகும்.

Tuesday, February 15, 2011

காதல் – விடியல்

அவள் இல்லாது போக,
தூக்கம் சொல்லாது போகும்!
விடியில் இல்லாது ஆகும்!!
அவள் விரும்பி வந்திட,
விடிந்து விடும், வாழ்வும் சேர்ந்து!

Monday, February 14, 2011

காதல் – கண்ணாடி

காதல் பாதரசம்
எங்களிருவள்ளும் பூசியிருக்க
அவள் கண்ணில் நானும்
என் கண்ணில் அவளும்
தெரிகிறோம்!

Sunday, February 13, 2011

காதல் – மாயை

இருப்பது போல் இல்லாதிருக்கும்;
இல்லாதது போல் இருந்திருக்கும்.
இருந்தாலும் இல்லாது போனாலும்,
தன்னுயிரை மற்றவருக்கு தந்தும்,
உயிருடன் இருக்கும்!

Saturday, February 12, 2011

நிழலும் நிஜமும்

இறந்தவர் ஜாடையில் பிறந்தவர் இருந்திட
இறந்தவர் நிஜமாவர், பிறந்தவர் நகலாவர்.

நிஜமிருந்து நகல் வாழும் நிழல் உலகமிது,
நகலும் நிஜமாகி இறந்து போகும் பூடக வாழ்வுமிது,
நிழலும் நிஜமாகும் கலியுகமிது!

Friday, February 11, 2011

விடாமுயற்சி

கடல் மண் எடுத்து, கடல் அலை
பின் செல்ல வீடு கட்டும் பணி
இங்கே மனிதர் பலரும் செய்கின்றனர்;

அலை மீண்டும் மீண்டும் கட்டிய
வீட்டை கலைக்கும் ;
அலை அயரும் நாளன்று வீடும் முடிந்து விடும்!

அன்று வரை மீண்டும் மீண்டும்
பணி தொடரும் விடாமுயற்சியாய்,
ஐந்தாண்டுக்கு ஒரு முறை!

Thursday, February 10, 2011

தந்தை

அவரை இதுவரை
அண்ணாந்து பார்த்தே வளர்ந்துவிட்டேன்!

இன்று அண்ணாந்து பார்க்கையிலும்
அவர் உயரம் உயருது - ஆயினும்
என் உள்ளம் ஏனோ உருகுது!!

Wednesday, February 9, 2011

கடமை

ஒன்றின் ஜிவிதம் உணவாம்,
மற்றதிற்கு விலங்கினத்தில்.

விலங்கினமாய் மனிதர் மத்தியில் கட்சிகள்,
ஒன்றின் ஜிவிதம் உண்வாம் மற்றதிற்கு!

கொன்று தின்பதே கடமையாம் இவ்வினங்களுக்கு,
அதன் முறையே தீமையாகும் மனிதர்க்கு!!

தீங்கை நினைந்து வாழ்தல் மடமையாகும்,
கடமையை புரிந்து வாழ்தலே அறிவாகும்!

Tuesday, February 8, 2011

என்றோ எழுதிய கவிதை - 18

அலைகள் ஒரு நாள் ஓயும்...
சூரியன் மேற்கில் உதிப்பான்..
காற்று கைகளில் சிக்கும்...
காதலுக்குக் கூட மரியாதை கிட்டிவிடும்..
ஆயின்..
மாமியார் - மருமகள் உறவில்
சமாதான உடன்படிக்கை
என்று கையெழுத்திடப்படும்?!

Monday, February 7, 2011

வோட்டு

உழுதவனையும், உண்டவனையும்
தொழுது பலரும் கேட்கும் ஒன்று;
கேட்டவரில் ஒருவருக்கு
நிச்சயம் கிடைக்கும்!
போட்டவருக்கு தொழுகை மட்டும்
மிச்சமாகும்!!

Sunday, February 6, 2011

நெருப்பு!

பார்த்தாலும், பாராதிருந்தாலும்,
தொட்டாலும் தொலைவாயிருந்தாலும்,
சுடும், தகிக்க வைக்கும்!
தீயாய் எரிக்கும்!
என்றும் எரியத் தயாராய்,
தணலாய் மனமாகும்,
உன்னை நினைக்கையில்!

பெண்ணே நீயும் நெருப்பு தானோ?!

Friday, February 4, 2011

மெளன மொழி

காதலியின் ஊடலில்,
மனைவியின் பசலையில்,
தாயின் பாசத்தில்,
தந்தையின் கடமையில்,
மகனின் ஆசையில்,
என அகராதியில்லாமல்
புரியவைக்கும் மொழி!
என்னை எப்பொழுதும்
இவர்கள் வெற்றி கொள்ளும் வழி!!

Thursday, February 3, 2011

மகனின் கேள்வி!

முழுதாய் இருத்தல் முக்கியமென்றும்,
ஆற்றல் மட்டும் இலக்கென்றும்,
அழித்தலும், அழிவும் நல்லதல்ல என்றே
கற்பித்தேன், மகனிடம் போதித்தேன்;

படைத்ததெல்லாம் அழியுமென்று அறிந்தும்
படைக்கும் இறைவனுக்கு
இதையேன் யாரும் கூறவில்லையென்று?
பதிலாய்க் கேள்வி கேட்டான் தகப்பன் சாமியாய்.

இறைவனை வினவ இயலாது,
மகனுக்கும் பதில் தெரியாது,
போதனை பாதியில் நின்று போக,
விடை தெரியா வினாவாய் கற்றதும்,
அறிந்ததுமே கேள்வியாயிற்று.

புரியாத கேள்வி கேட்டு புயலாய்
சென்று விட்டான்;
விடை தேடும் என் மனதில் மட்டும்
புயல் வீசி ஓயவில்லை!

Wednesday, February 2, 2011

இறைவன்

என்னுள் இறைவனை நான் கண்டேன்,
மற்றோரின் ஆசையை பூர்த்தி செய்கையில்!

என் ஆசை தான் தீர மற்றோர்
இறைவனைத் தேடுகின்றேன்!!

இறைவனாய் ஆகையில்
தன்னிறைவு தானே வருகுது!

என் நிறைவு ஏனோ
இறைவனைத் தேடுகையில்
இல்லாமல் போகுது!!

Tuesday, February 1, 2011

மனிதன்!

நேற்று உடல்நலத்தை விற்றுக் காசாக்கி,
இன்று அந்தக் காசில் உடலைக் காத்து
நாளையை யோசித்து, இன்றை செலவழித்து
என்றும் வாழாது இருக்கிறான்!

சாவில்லாது போல் வாழ்ந்து,
வாழாது சாகிறான்!