Monday, January 31, 2011

தாம்பத்யம்

ஊடல் கொண்டு, கூடல் செய்து,
கடமை பயின்று, கர்மம் கழித்து,
முடிந்தால் சந்ததி பெருக்கி வாழ்வதென்பர்!
கடமையும், கர்மமும் தானே கழிய
சந்ததி சிலருக்கு மட்டுமாகும்.
ஊடல் தின நிகழ்வாகி,
தான் பத்தியமாயிருக்க,
தாம்பத்யம் இங்கே தேடலாகிறது!

Sunday, January 30, 2011

யுத்தம்

மாறுபட்ட யுத்தமொன்று
நடக்குது என்னுள் தினமும்
இரு மனங்களுக்கிடையில்
எது வென்றாலும் தோற்றாலும்
வெற்றி எனக்குத்தான்
அன்றைய தோல்வியே
அனுபவ பயிற்சியாய், ஆயுதமாகும்
மீண்டும் மீண்டும் யுத்தம்
நடக்கும் , யுத்தமே
தினமும் அனுபவமாகும்

Saturday, January 29, 2011

விரக தாபம்!

நிலமாய் நிலைத்திருக்கும்;
நீராய் வேர்த்திருக்கும்;
விண்ணாய்ப் பரந்திருக்கும்;
நெருப்பாய் எரித்திருக்கும்;
காற்றாய் அலைபாய்ந்திருக்கும்.
இது, பஞ்ச பூதங்கள் சேர்ந்த
ஆறாம் பூதம்!
நம்மிடமிருக்க
தவமாய், வரமாய், சுகமாய், ஆகும்!
அதனிடம் நாமிருக்க
பூதமாய், அழிவாய்ப்போகும்!!

Friday, January 28, 2011

அவமானம்!

அன்று போராட்டம் அரசியல்
நடத்த -
வென்றதில் கொடி பறந்தது
பட்டொளி விசி வெற்றியில்!!

இன்று அரசியல் நடத்த
போராட்டம் -
மானத்தையும் சேர்த்து
கொடி பறக்கிறது!!

அவமானம் இவர்களுக்கல்ல..
நம் கொடிக்கு தான்!!

Thursday, January 27, 2011

தாயன்பு போலாகுமா?!

தன்னிலே விதைத்து,
தன்னையே வதைத்து,
என்னையே தந்தாளம்மா!
என்னையே தந்தாலும்
தாய் போலாகுமா?

விண்ணையே அளந்து, மண்ணையும் பிளந்து,
தேடினாலும் கிடைக்குமா?
தாயன்பு போலிங்கு வேறேதம்மா?

சிறையிலே சிறகு வைத்து,
தன்னையே சிறையாய் வைத்து,
விண்ணிலே விட்டாளம்மா!
பறந்தாலும், திரிந்தாலும்
தாயன்பு கிடைத்திடுமா?
தாயன்பு போலிங்கு வேறேதம்மா?
என் தாய் போலாகுமா?

தன்னிலே ஓளித்து, ஊணிலே வளர்த்து,
மண்ணிலே விட்டாளம்மா!
விதைத்தாலும், வளர்த்தாலும்
தாயன்பு வந்திடுமா?
தாயன்பு போலிங்கு வேறேதேம்மா?
என் தாய் போலாகுமா?

மடி தந்து, மதி தந்து,
உடை தந்து, உணர்வும் தந்து,
விழி தந்து, வழி தந்து,
வாழ்வும் தந்து, வாழ்வாய் வந்து,
என்னுள்ளே இருப்பாளம்மா!
இருந்தாலும், இறந்தாலும்,
தாயன்பு அகலாதம்மா!
தாயன்பு போலிங்கு வேறேதேம்மா?
என் தாய் போலாகுமா?

Tuesday, January 25, 2011

காற்று!

தென்றலாய், புயலாய்,
நறுமணமாய், பல விதமாகி
என் சுவாசமாய்
என்னை சூழ்ந்திருக்கிறது
உன்னை போல்!

Monday, January 24, 2011

கடலோரம்

அலைகள் என் காலோரம் சேர்கையில்
கடலோர மண்ணில், காற்றில்
அந்த கடலின் ஓசையில்
என் காதல் உன் செவியில் விழாதிருக்கும்..
விழியில் மட்டும் தெரிந்திருக்கும்!
விடியலாய் மனதில் விரிந்திருக்கும்!!