Thursday, December 31, 2009

ஜே கே!

திசம்பர் 31 பிறந்த நாள் காணும்
எங்கள் அண்ணன்(?!) ஜே கே
அவர்களை
வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்!

Wednesday, December 30, 2009

இலட்சியம்!

கல் எய்து பழம் தேடுவோம்
கல்லாய் பதில் வர ஓடுவோம்
எய்தல் நிறுத்த பழம் மறப்போம்
பழம் தேட எய்தல் தொடருவோம்
எறிதலும் பெறுதலும் தொடர்கதையிங்கு
அறிந்து நடக்க பழம் நிச்சயமாகும்
முறிந்து மறக்க கல் மட்டுமே மிச்சமாகும்

Saturday, December 26, 2009

நம் வாழ்க்கை!

தகிக்கும் சூரியன்
தேயும் நிலவு
தொடமுடியா வானம்
முகந்தெரியா காற்று
ஆழந்தெரியா கடல்
நிற்கத்தெரியா அலை
மூலம்தெரியா மழை
முடிவில்லா பூமி
எப்பொழுதென்று அறியா ஜனனம்
என்றென்று அறியா மரணம்
புதிராய் ஒர் உலகமிது,
விடையில்லா விடுகதையாய் இவையிருக்க,
இதில் தொடர்கதையாய் நம் வாழ்க்கை !!

Tuesday, December 22, 2009

அலைக்கழியும் தூக்கம்

துக்கங்கள் மட்டுமல்ல..
சில சமயங்களில்
சந்தோஷங்களும்தான்
தூக்கத்தை
அலைக்கழிக்கின்றன...!

Thursday, December 17, 2009

என்றோ எழுதிய கவிதை - 13

ரோஜா ஒன்று என் காதோரம் வந்து
க(வி)தை பேசிற்று...

"இருந்தாலும் ஒரே மணம்
பறித்தாலும் ஒரே மணம்
முகர்ந்தாலும் ஒரே மணம்
பரமனுக்குப் படைத்தாலும் ஒரே மணம்
பாவை அவள் வைத்தாலும் ஒரே மணம்
பிய்த்தாலும் ஒரே மணம்
வாடி உலர்ந்தாலும் ஒரே மணம்

ஆயின்...உங்களுக்கு

களிப்பிற்கு ஒரு முகம்
கவலைக்கு ஒரு முகம்
வஞ்சனைக்கு ஒரு முகம்
வாசனைக்கு ஒரு முகம்
அசிங்கமாய் ஒரு முகம்
அவலமாய் ஒரு முகம்
நீங்கள் மட்டுமே அறிந்த ஒரு முகம்
மொத்தத்தில் எங்கே தொலைந்தது
உங்கள் திருமுகம்?"

கேள்விக்கு பதில் என்னிடம் இல்லை...
உங்களிடம்...?

Wednesday, December 16, 2009

மௌனம்

இறுதி வரை நம்முடனிருக்க
நாமறியோம்!
இறுதியில் நம்முடனிருக்க
நாமறியோம்!

Sunday, December 13, 2009

முள் வேலி

முள் வேலி ஒன்று நெய்திட்டேன்
காதலாய்

காதல் கொண்டு வேலி வளர்த்தேன்
காதல் வென்று வாழ்வும் வளர்த்தேன்
வாழ்வோடு காதல் மலர
வேலி நிற்கும் கேள்வியாய்

ஆண்டுகள் பல ஓடியும்
காதல் இன்னும் ஓயவில்லை
முள்ளும் மலரவில்லை
வேலியும் மறையவில்லை

முள்ளாய் வலியாய் என்னுள்
வேலியாய் இடவெளியாய்
என் சுற்றத்துள்

Friday, December 11, 2009

"பாயும் புலி" பாட்ஷா!

ரஜினி அவர்கள் பிறந்த நாளன்று (12/12/2002) எழுதப்பட்ட கவிதை
இங்கே மறுபிரசுரம் செய்யப்படுகிறது.


அபூர்வ ராகங்களாய் இதயத்தில் நுழைந்தவனே!
உன்னை நினைத்தாலே இனிக்கும்!!

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் உரைப்பவனே!
துடிக்கும் கரங்கள் உடையவனே!
தர்மத்தின் தலைவனான
இந்த முத்து எங்கள் சொத்து!

முரட்டுக்காளையாய் இருந்தாலும்
மூன்று முடிச்சில் அடங்கித்தான் போனாய்!
ஆறிலிருந்து அறுபது வரை ஆன்மிகம்தான்
என்றாலும் அகிலமெங்கும் உன் கொடி பறக்குது!

பொல்லாதவன் எனச் சிலர் நினைக்க
நல்லவனுக்கு நல்லவன் நான் என்றாய்!
போக்கிரி ராஜா எனச் சிலர் தூற்ற
தனிக்காட்டு ராஜா நான் என்றாய்!
அவர்கள் விமர்சனம் உனக்கு எங்கேயோ கேட்ட குரல்!
ஏனெனில் அனேக தமிழர் உன் படையப்பா!

நான் அடிமை இல்லை என உரக்க நீ உரைத்தாலும்
இந்த அண்ணாமலைக்கு நாங்கள் அடிமைதான்!
பாபா முத்திரைதான் எங்களுக்குப் பாட முத்திரை!!

அபூர்வ ராகங்களாய் இதயத்தில் நுழைந்தவனே!
உன்னை நினைத்தாலே இனிக்கும்!!

Thursday, December 10, 2009

மகாகவி பாரதி!


எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும்;
தெளிந்தநல் லறிவு வேண்டும்;
பண்ணிய பாவ மெல்லாம்
பரிதிமுன் பனியே போல,
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்!

மகாகவி பாரதி உதித்த தினம்
(11 திசம்பர்)

Tuesday, December 8, 2009

மரணம்!

காற்றை உள்வைத்துக்
காற்றைத் தேடிக்
காற்றாயாகும் பயணம்!

தூசி!

விழிக்குளத்தில்
தூசி விழுந்ததால்
கலங்கலாயிற்று...!

Sunday, December 6, 2009

மணிவிழா நாயகன் - 4

இரு வேடங்களில் ரஜினி!


அமிதாப் படங்களின் தமிழாக்கத்தில் ரஜினி நடிக்கத் துவங்கியது 'பில்லா' (1980) படத்திலிருந்துதான்.

கடத்தல் மன்னனாக, தெருவோர ஆட்டக்காரனாக இரு வேடங்களில் தன்னை முழுமையாகக் கொடுத்து, இந்திப் பதிப்பிற்கு ஈடாக பொருத்திக் கொண்டார் ரஜினி. கண்ணதாசன் எழுதிய 'மை நேம் இஸ் பில்லா', 'நாட்டுக்குள்ள எனக்கு ஒரு ஊருண்டு' பாடல்களின் வரிகள் ரஜினியை நடிகனுக்கும் மேலான தனி மனிதனாய் மக்களுக்கு அடையாளம் காட்டின. சூப்பர் ஸ்டார் பட்டம் 'பைரவி' தந்துவிட்டாலும், சூப்பர் ஸ்டார் அந்தஸ்து ரஜினிக்குக் கிடைத்த படம் 'பில்லா'.

அன்றைய அலங்கார் திரையரங்கில் 25 வாரங்களுக்கும் மேலாக ஓடி ரஜினிக்குப் புகழை வாரிக்கொடுத்த 'பில்லா', தயாரிப்பாளர் பாலாஜி அவர்களுக்கும் 'ரீமேக்' படங்களைத் தயாரிக்கும் ஆர்வத்திற்குப் 'புதுப்பாதை' அமைத்துக் கொடுத்தது என்றால் அது மிகையல்ல.



ரஜினி-மகேந்திரன் கூட்டணியில், வித்தியாசமான பின்னணியில் அமைந்த படம் 'ஜானி'(1980).

நாவிதராக வரும் ரஜினியின் கஞ்சத்தனம் - வீட்டிற்கு இரு பூட்டுக்களைப் பூட்டிவிட்டு இழுத்துப் பார்ப்பது, செடியிலுள்ள பூக்களை எண்ணி எண்ணிச் சரி பார்ப்பது - sober look, நடை, உடை அனைத்திலும் வித்தியாசமோ வித்தியாசம். கத்திரிக்கோலைப் பிடிப்பதிலும், முடி வெட்டுவதிலும் ஸ்டைலோ ஸ்டைல். ரஜினி-ஸ்ரீதேவி ஜோடிப் பொருத்தம் இயல்பு+சூப்பர். திருடன் ரஜினி, ஸ்ரீதேவியிடம் அன்பை எதிர்பார்க்கும் இடம் இனிமை.

'எப்போதும் ஒண்ணை விட ஒண்ணு பெட்டராத்தான் இருக்கும். அதுக்கு முடிவே இல்ல' என்கிற ரஜினி டயலாக் படத்திற்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும்தான் எத்துணை பொருத்தமானது?!

இளையராஜாவின் இசை + அசோக்குமார் ஒளிப்பதிவு படம் முழுதும் ஒட்டியிருப்பது மற்றுமொரு சிறப்பு.

"பாகவதரிடமோ, எம்ஜியாரிடமோ இருந்த சில சிறப்பு அம்சங்கள் எதுவுமே இல்லாமல், தனக்கென உயர்வான ஒரு தனி மேடையை மக்களால் அமைத்துக்கொண்ட ரஜினியின் ஆற்றல் மகத்தானது. " 'சூப்பர் ஸ்டார்' பட்டம் நிரந்தரமல்ல," என்று அவர் சொன்னாலும், 'சூப்பர் ஸ்டார்' புகழ் மக்களால் தரப்பட்டது. இனியொருவர் இந்த இடத்தைப் பிடிப்பது நடக்கிற காரியமில்லை" என்கிறார் இயக்குநர் மகேந்திரன்.


பொதுவாக மகன் தவறு செய்வான்; தந்தை தட்டிக் கேட்பார். இதுவே தலைகீழாயிருந்தால்? நெற்றிக்கண்(1981) கதை இதுதான்.

தன் வயதிற்கு மீறிய வேடமென்றாலும், ரஜினி அப்பா 'சக்ரவர்த்தி'யாக ஏற்று நடித்துக் காட்டிய ஸ்டைல், தோரணை அடேங்கப்பா! ரஜினியின் நடிப்புக்கு சவால் விடும் ரெட்டை வேடங்கள், 'நடிப்பு பிசாசு'கள் லக்ஷ்மி/சரிதா, விசுவின் அருமையான கருத்து/கசையடி வசனங்கள், இளையராஜாவின் இன்னிசை என அத்துணை அம்சங்களும் இருந்தால் படம் ஏன் நூறு நாட்கள் ஓடாது?!

"அப்பா பிள்ளை டூயல் ரோல் என்பதால் இரண்டு பேரும் ஒன்றாகத் தோன்றும் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் பாபு அவர்கள் ரொம்பவே மெனக்கிட வேண்டியதாயிருந்தது. ஏனென்றால் அப்போதெல்லாம் மாஸ்க் பண்ணிப் பண்ணித்தான் எடுக்க வேண்டும். அப்பாவுக்கும் மகனுக்குமிடையே சண்டையும் வரும். அதையும் மிகவும் கவனமாக மாஸ்க் பண்ணித்தான் பாபு எடுத்தார். அப்படி மாஸ்க் பண்ணும்போது, நடுவில் கோடு தெரியாமல் எடுக்கும் லாவகத்தை ஒளிப்பதிவாளர் பாபு அவர்கள் பெற்றிருந்தார்" என இயக்குநர் எஸ் பி எம் பெருமிதமாய்ப் பேசுகிறார்.

'ரஜினி என்னும் வைரத்தை நான் கண்டுபிடித்தாலும், வைரத்தைப் பலவிதமான கதா பாத்திரங்களைக் கொடுத்து, எஸ் பி எம் பட்டை தீட்டினார்' என்கிறார் இயக்குநர் சிகரம் கே பாலசந்தர்.

மூன்று படங்களும் ஒன்றரை ஆண்டுகள் இடைவெளியில் வெளி வந்து, வெற்றி முத்திரை பதித்து, ரஜினியை 'புது அவதார'மாய்ப் படவுலகுக்கு அடையாளம் காட்டின.

இவைகளுக்கு நடுவில் மிக முக்கியமான படமொன்றிலும் ரஜினி நடித்தார், அது...

தகவல்களுக்கு நன்றி
ஏவி எம் தந்த எஸ் பி எம் - விகடன் பிரசுரம்
சினிமாவும் நானும் - இயக்குநர் மகேந்திரன்

கவிதை என்ன செய்யவேண்டும்?

இந்தியா தனது ஜனநாயகத்தை விரயம் செய்து கொண்டிருப்பதைப் போல நம் கவிஞர்கள் கவிதையைச் செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கவிதை என்ன செய்யவேண்டும்?

வாழ்க்கையையும் மொழியையும் அர்த்தமுள்ளதாக்க வேண்டும். சமூகத்தையும் சக மனிதர்களையும் காதலிக்கக் கற்றுத்தரவேண்டும். மரபின் மீது பெருமிதமும், எதிர்காலத்தின் மீது நம்பிக்கையும் ஏற்படுத்த வேண்டும்.

மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்.

Saturday, December 5, 2009

விடைகொடு என் தோழா!

இன்றைய கணிப்பொறி உலகில் நிலையானது ஏதுமில்லை.

என்னுடன் உழைத்த சக நண்பர்களில் ஒருவர் வேலையிழக்க நேரிட்டது. 8 வருட காலமாக பக்கத்து இருக்கையில், 12 மணி நேரம் பின் கணினி மூலம், இன்னும் சில, என்று இருந்தவர் இனி பேசக்கூட இல்லாமல் போய் விடுவார் என்ற வருத்ததிலும்,

இறுதி நாளில் இருந்த கடைசி 10 நிமிடங்களில் அவருக்கு ஏதேனும் பரிசாய், நினைவாய், கொடுக்க எண்ணி எழுதியது இது.

அவர்தம் குடும்ப சகிதம் இதைப் படித்து அனுபவித்ததையும் என்னிடம் பகிர்ந்து கொண்டார். இழப்பு சோகம், இருந்தும் இல்லாமல் இருப்பது பெரும் சோகம், அதுவும் நம் நாடன்றி வெளிநாட்டில் இது தாளாத சோகம்..


விடைகொடு என் தோழா, விடையற்ற வினாவோடு
விடைகொடு என் தோழா,
விடாது இருக்கும் நம் நட்பு, தொடாது தூரம் நீ சென்றாலும்
விடாது இருக்கும் நம் நட்பு

நதிபோல் பல பாதை நாம் கடந்தோம்
கல்லும் முள்ளும் மேடும் பள்ளமும் களைந்தோம்
சேர்ந்தே தெளிந்தோம் யாவும் பகிர்ந்தோம்
நம்மை விதைத்தே நாம் வளர்ந்தோம்
பிரிவென்பதை மறந்தோம் உழைப்பினில்
நம்மை மறந்தோம்

தேடுதலில் புரிதலின்றி வேட்டையில் இலக்கின்றி
பாதையில் நோக்கின்றி காலத்தின் மாற்றம் கண்டோம்
இனி விவாதிக்க, வம்பிழுக்க சிரித்திருக்க, வெறுமே
பார்த்திருக்க பக்கத்தில் உன் உருவமில்லாது போகும்

இருக்கைகள் எல்லாம் இளைப்பாற
நினைவுகள் வேலை செய்யும் நேரமிது
வெற்று பார்வையில் காற்றை தீண்டி
இல்லாத தாகத்திற்கு தண்ணீர் தேடி
கடிகார முள்ளை நானும் சேர்ந்தே தள்ளி
நாள் நகர்த்தும் காலமிது

வேற்று கிரகம் போல் என் இடமாகும்
நீருற்று போல் நாம் இருந்த காலம்
நினைவில் ஓடும்
வழியில் பார்ப்போமினி
கை உயர்த்தி கண் இருத்தி
பெருமூச்சோடு நம் வழி தொடருவோம்
விடாது இருக்கும் நம் நட்பு தொடாது தூரம் நீ சென்றாலும்
விடாது இருக்கும் நம் நட்பு

நீ இனி போகுமிடமெல்லாம்
வெற்றி கண்டு வீடோடு சிரித்திருக்க
என் மனதோடு பிரார்த்திருப்பேன்
விடைகொடு என் தோழா!

Friday, December 4, 2009

மணிவிழா நாயகன் - 3

நினைத்தாலே இனிக்கும் (1979)




பாலச்சந்தர் இயக்கத்தில், சுஜாதா எழுத்தில், எம் எஸ் விஸ்வநாதன் இசையில் நனைந்த 'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் ரஜினியின் பங்கு முக்கியமானது.

கொஞ்சம் உன்னிப்பாக நோக்கினால் தீபக் பாத்திரத்தில், சுஜாதாவின் ஆதர்ச நாயகர்களில் ஒருவரான வஸந்த்-ஐப் பார்க்கலாம். பேச்சில் நக்கல், எதையுமே சீரியஸாக எடுத்துக்கொள்ளாத தன்மை, எந்தப் பெண்ணைப் பார்த்ததும் விழிகள் விரிவது, கொஞ்சம் புத்திசாலித்தனம்/நகைச்சுவை கலவையில், குறுந்தாடி ரஜினி 'புகுந்து விளையாடிய' படம்.

சின்னச் சின்ன திருட்டுக்கள், 'டேப் சுந்தரி'யைத் தேடி அலைவது, 'வரவேற்பாளினி' (நன்றி: சுஜாதா)யைப் பார்த்து ஜொள்ளு விடுவது, 'சிவ சம்போ' (அப்போதே சிவனுடன் சம்பந்தம் இருந்திருக்கிறது!)வை விடாது பிடித்திருப்பது, 'சிவ சம்போ' / 'நம்ம ஊரு சிங்காரி' பாடல்களில் ஏகத்துக்கு 'ஷ்டைலு', போக வில்லன்களைப் போட்டு உதைப்பது என ரஜினிக்குத் தீனி நெறைய்ய!

இதையெல்லாம் விட, டொயோட்டா காருக்கு ஆசைப்பட்டு, இறுதியில் 'சுண்டு விரல் போதும் ஸார்!' என உச்சபட்ச டென்ஷனுடன் ரஜினி அடங்கிப்போவது ஹிலேரியஸ் அடேங்கப்பா!

ரஜினிக்கு நகைச்சுவை உணர்வு(ம்) உண்டு என்பதை அழுத்தமாய்க் கோடிட்டுக் காட்டிய முதல் படமும் இதுதான்!

Thursday, December 3, 2009

தியாவிற்கு நன்றி!

கவிதை கொண்டு, விதையிட்டு,
தமிழ் வளர்த்து, தமிழ் ரசித்தோம்!

தீயாய் தரணியில்,
தீரா தாகம் கொண்ட தியா,
தன்னிலும் வளர்த்து, பிறரிலும் ரசித்து,
விருதொன்று தந்து,
பதிவுகளுக்கு விழுதாய் ஆகிவிட்டாரே!

நண்பர்களுக்கு விருந்தாய்,
பதிவிற்கு விருது தந்து,
தன்னையே அனைவரிலும் பதிந்து விட்டாரே!

கவிதை வளர்க்கக்
கவிதையாய் வித்திட்டாரே!
தான் உயர, தரம் உயரும்,
நாம் உயர,தரணி உயரும்
என உணர்த்திட்டாரே!

பதிவாளர்களையும் வாழ்த்தி
நன்றியாய் வந்த கவிதை இது!
நன்றாய் ஏற்றுக்கொள்வாயா
நண்பரே, தியாவே?!

விருது பெற்ற அனைத்து பதிவாளர்களுக்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

Tuesday, December 1, 2009

சின்னதாய் ஒரு தோட்டம்...

என் தோட்டம்
மிகச் சிறியது...

முன் காலையில்
இலையின் விளிம்பிலின்று
சந்தோஷமாய்த்
தற்கொலை செய்து கொள்ளும்
பனித்துளி!

தோட்டமொன்றை வைக்கச்
செடிகளை விடச்
சிந்தனைகள்தான் வேண்டும் எனச்
சொல்லாமல் சொல்லிப்போகும்
வண்ணத்துப்பூச்சி!

மெத்தென்ற புல்வெளியில்
தன் 'குட்டி' குட்டிகளைப் போட்டு
இரை தேடிச் செல்லும்
பூனை!

அவ்வப்போது வந்து...
ஆங்கிலத்தில் கொஞ்சி
ரோஜா கேட்கும்
மழலை மொழி!

இன்று என் வீடு,
நாளை மாடி வீடு - என
உயரும் கிறிஸ்துமஸ் செடி!

மெலிதான தூறல்களின்
தாளத்துக்குத் தாக்குப் பிடிக்கும்
சின்னச் சின்ன விதைகள்...

கவிதையே தோட்டமா??
தோட்டமே கவிதையா??

இரண்டும் ஒன்றுதான்..
பெரிது பார்வையும்
சிறிது நேரமும் இருந்தால்...!

ஒரு தோட்டத்தின் அழகு
பராமரிப்பவரைப் பொறுத்தது...!

ஒரு கவிதையின் அழகு
படைப்பவரைப் பொறுத்தது..!

கனவுகளில்லாமல்
வாழ வந்த
இந்திய நகரத்தில்
கனவு கண்டது

சின்னதாய் ஒரு வீடும்
பெரியதாய் ஒரு தோட்டமும்...!

நிழலின் முகத்தில்
நிஜமறிய
மனது திருத்திக்கொண்டது!

சின்னதாய் ஒரு வீடும்
(அட்லீஸ்ட்) மிகச் சின்னதாய்
ஒரு தோட்டமும்..!