Thursday, April 28, 2011

இதழ்!

உன் இதழ் எழுதும்
கவிதைகளை வாசிக்க
முடியவில்லை,
ஆனால் சுவாசிக்க முடிகிறது
என்றும் என்னுடனிருக்க..!

Wednesday, April 27, 2011

தேய்பிறை

தேய்வது போல்
தோன்றினாலும் தேய்வதில்லை!

முழு நிலவின் பாதி தெரியும்
நம் கண்களில்தான் தேய்பிறை!!

Tuesday, April 26, 2011

உன் பார்வை!

என் பிம்பம் தெரியும்
உன் கண்ணில்!

நீ பார்க்கும்
பார்வை என் உலகாகும்!

என் உலகின்
பார்வையாவும் நீயாகும்!

முடிவில்லா சுற்று இது!!

Monday, April 25, 2011

உன் காதல்

உன் காதல்
கடலலையாய் ஓயாதிருக்கும்!
ஈரமணலாய் என்
மனமதில் காயாதிருக்கும்!!

Sunday, April 24, 2011

கல்வியும், கலவியும்!

ஜே கே 'ஷ்டைல்'-ல் ஒரு கவிதை!

கற்கக் கற்க
முதலுமில்லை, முடிவுமில்லைதான்...!

புதிராயும், புதுமையாயும்
இருப்பது எப்போதும் இங்குதான்...!

ஒவ்வொரு முறையும்
கற்பதும், கற்பிப்பதும் சுகம்தான்...!

நடந்ததை நினைவில் வைத்து,
அசை போடுவதில் என்றும் ஆனந்தம்தான்..!

ஒன்றைப் பொதுவில் வைத்து,
ஒன்றை மறைவில் வைத்து
வாழ்தல் முறையாகும்...!

மாறாய்க்
கலவியைப் பொதுவிலிட்டு,
கல்வியைக் குடத்திலிட்டு
வாழ்தல் பிழையாகும்...!

Wednesday, April 20, 2011

மெய்ஞானம்

மெய் என்ற ஞான பாதை
வழி தெரியா பாதையாம்!
வழி மட்டுமே குரு காட்ட,
தேடல் வேண்டுவோர்க்கு!!

தேட தேட பாதை தெளிவாகும்,
வழி புலனாகும்; மற்றோர்க்கு
அஞ்ஞானம் மட்டும் மிச்சமாகும்!
வழி புரியா பாதையாகும்!!

Tuesday, April 19, 2011

தியானம்

மனதினை வெற்றிடமாக்கி,
வெற்றிடத்தில் ஏதும்
இல்லாதிருக்க வைத்து,
ஏதும் இல்லாததை பார்த்திருத்தல்!
அதனில் லயத்திருத்தல்!!

Monday, April 18, 2011

கோபம்

தீனி போட்டு வளர்த்திட,
நம்மையே தின்றிடும்!
தள்ளி நின்று பார்த்திட,
புகையாய் மறைந்திடும்!
உருவமென்றெதுமில்லை இதற்கு!
நாம் இடங்கொடுக்க, நமக்கு
இடமின்றி ஆக்கிவிடும்!!

Sunday, April 17, 2011

கலவி

கலையாமல் கலைத்து,
கலைத்ததில் திளைத்து,
கலந்திருக்கும் தியான நிலை!

தானே கற்க,
தனக்கே கற்பிக்கும்
மோன நிலை!!

Saturday, April 16, 2011

மன அழுக்கு

ஆழ் மனதின் அழுக்கு பல நாளாய்
ரணமாய் உறுத்தலாய் என்னிலிருந்தது,
முயற்சியெல்லாம் பலனின்றி ஆனது
அழுக்கின்றி இருந்திட வழி தேடி
நின்றிருந்தேன் பல நாளாய்...

மனப்பார்வை மட்டுமுள்ளவரை
சாலை தாண்டிவிட்டேன் ஓர் நாள்,
நன்றி தேடாது பாதை மாறினேன்
அவர் கோல்பார்வையில் தரை
தட்டி செல்ல என் அழுக்குதிர கண்டேன்...!

Friday, April 15, 2011

அழகு

தன் உணர்வை, தானே பிம்பமாய்,
திகட்டாது கண்டு களிக்கும் மனது!

முதுமை வயதினில் உண்டு,
மனதிலன்று என்றுணர்தவர்க்கு
அவர்முகம் என்றுமே அழகு!

Thursday, April 14, 2011

புத்தாண்டு

புன்முறுவலை உதட்டுக்கு
வாடகை கொடுத்து,
எல்லா துயரும், தடையும்
திடத்தோடு வரும் நாளில் தாண்ட,
வருடத்தில் ஓர் நாள் புத்தாண்டு!

நிதமும் திடமிருப்பின்,
புன்முறுவல் நிலையாயிருப்பின்,
தினமும் எனக்கு புத்தாண்டு!

Wednesday, April 13, 2011

பரிசு

தருவதின் சந்தோஷம் கொண்டு,
தருவோர்க்கு வருமே சந்தோஷம்!

அத்தருதலில் அத்தருணத்தில்
அஃதே அவரின் பரிசு!!

Tuesday, April 12, 2011

வலி

தன்னுயரம் தானறியாது,
வலிக்க, வலிக்க,
உயர்ந்திருக்கும், மரத்திருக்கும்!
நம் வலி நமக்கு மட்டும் தான்!!

சிறு வலியை பெரு வலி மறக்கடிக்கும்
பெரு வலி பழகிட, புது வலி
தேடியிருக்கும் நம் வாழ்வு!

Saturday, April 9, 2011

புத்தகம்

ஆசானாய் கோலின்றி,
கோபமின்றி போதிக்கும்!

தேடுதல் தந்திடும், தேடவிடாது!
தவறெல்லாம் திருத்திடும்
வன்சொல்லில்லாது..!!

என் உலகாயிருக்கும்
மனிதரேயின்றி போனாலும்
புத்தகம் போதும்
உற்ற நண்பன் போலாகும்...!

Friday, April 8, 2011

சந்தேகம்

வெற்றியின் முயற்சியையும்
கூர்முனை இல்லாது செய்யும்
நம் மன போக்கு,
அகத்திடை வந்திட அகமே புறமாகி,
மனமழுங்கிட வைக்கும்!

Thursday, April 7, 2011

புகழ்

நீரின் வட்ட அலைகளாய்
ஒருமுறை கிட்டிட
தொடர்ந்திருக்கும் விரிந்திருக்கும்..!

தன்னிலை புரியாதிருந்தால்
மீண்டும் நீராய் வடிந்திருக்கும்..!!

Wednesday, April 6, 2011

ஏழை உணவு

ஒரு பானை சோற்றுக்கு
ஒரு சோறு பதம் என
பதம் பார்த்து உண்போர் சிலர்!

பதம் பார்க்கும் அரிசியே
உணவாம் இவர்க்கு!!

Tuesday, April 5, 2011

பட்டாம்பூச்சி!

வீட்டின் கரப்பானை
விரட்டி வீரம் கொண்டேன்!

எத்திவிட தூரம் சென்றது
கவிழ்ந்து விழுந்தது!

முழுதாய் விரட்டிட
அருகில் சென்றேன்
சிறிதாய் பறந்தே
வெளியில் சென்றது!

என் வயிறெல்லாம்
பட்டாம்பூச்சியை பறக்கவிட்டு!!

Sunday, April 3, 2011

உலகக் கோப்பை

தோனியே தோணியாய்க்
கரைசேர்த்துத் தந்தார் இந்தியாவிற்கு!

இது பல கோடி
இந்தியர்க்கு ஒரு சந்தோஷக் கோப்பை!!

Saturday, April 2, 2011

முதுகு

நம் முதுகின்
நிலையறியாமலே,
புற முதுகின்
அழுக்கையும்,
கரைகளையும்
பார்த்தே வளர்கிறோம்!

புறமுதுகு போரினில் மட்டுமல்ல
வாழ்வினிலும் அழகல்லவே!
அகமுதுகாய் மனதின் அழுக்கை அகற்ற
புறமுதுகும் அழகாகுமன்றோ!!

Friday, April 1, 2011

என்றோ எழுதிய கவிதை - 20

சினிமாத் தலைப்பு (அ) உயிரெழுத்துக் கவிதை!

அன்னக்கிளியாய் அவளிருக்க,
ஆசையுடன் நான்
'இதயத்தை திருடாதே' என்றேன்!

'உயர்ந்த மனிதன் நீ,
ஊருக்கு உழைப்பவன் நீ,
எங்கள் தங்கம் நீ,
ஏணிப்படிகள் ஏறினாலும் எட்டாத
ஒரு தலை ராகம் நம் காதல்' என்றதும்
ஓசையின்றி நொறுங்கிப் போனேன்!