Saturday, March 27, 2010

தொலைபேசி!

உறவுகள் தொலையாதிருக்க
குரல்வழியாய்
தூரத்தை மறைக்கும்...

வைத்த பின்
தொலைவை இன்னும் தொலைவாக்கும்!!

Tuesday, March 23, 2010

என்றோ எழுதிய கவிதை - 17

நான் யார்?

உயிரா?
உயிர் உள்ள உடலா?
உயிரும் உடலுமா?

உயிர்த்தது "நான்" என்றால்...
உதிர்வதும் "நான்" தானே?
எனில்...
உயிரில்தான் "நான்"!

உடலின் தோற்றம் "நான்" என்றால்...
உடல் மறைவதும் "நான்" தானே?
எனில்...
உடலில்தான் "நான்"!

உயிரும் உடலும் "நான்" என்றால்..
உயிரோடு உடல் போவதும் "நான்" தானே?
எனில்..
உடலும் உயிரும்தான் "நான்"!

யோசித்து பார்தததில் தவறு தெரிந்தது...
"நான்" என்பது "நான்" அல்ல...
எல்லாம் வல்ல "அவன்" என்று!

Tuesday, March 16, 2010

என்றோ எழுதிய கவிதை - 16

அருகில் வந்து
என் தலையைக் கலைத்து
அழகு காட்டிச் செல்லும்
அவளைப் பார்க்கையில்...

தத்தித் தத்தித் தாவும்
குழந்தையாய்...
மனசு...!!

Saturday, March 13, 2010

காதல் அந்தாதி!

கருவாய் காதல் உள்ளத்துள்
உள்ளத்து காதல் உணர்வாய் ஜனனம்

ஜனித்ததும் பருவம் கண்டது
கண்டதெல்லாம் சுகமானது

சுகமானது மட்டும் உணர்வானது
உணர்வில் அவளன்றி வேறேதும் அறியாதது

அறியாததெல்லாம் தெரிவித்தது
தெரிந்ததெல்லாம் புதிதானது
புதிதெல்லாம் புதிரானது
புதிரெல்லாம் விடையானது

விடை கண்டும் காதல் வினாவாகும்
வினாவிற்கு விடை தேடும் மனது!

Thursday, March 11, 2010

மனைவி!

இளமையில் முதுமையின் அனுபவந்தந்து
முதுமையில் இளமையின் சுகந்தருவாள்

இருக்கும் வரையில் இல்லாதிருப்பாள்
இல்லாதிருக்க ஏங்க வைப்பாள்

வாழ்வோடு இழைந்தது அறியாது
நாம் இருப்போம் அவளோடு
அவளன்றி வாழ்வொன்று இல்லாதுபோமோ?

அவளற்ற மெளனம் கொல்லும்
அவளோடு மெளனம் என்னை வெல்லும்

எல்லாம் அறிந்தும் ஊடல் தொடரும்
அவளோடு என் உலகம் வளரும் !!

Monday, March 8, 2010

Women's Universal Message to Men!

I do NOT want to be a FEATHER IN YOUR CAP;
NOR I want to be a PATCH IN YOUR HEELS;
What I NEED is
EQUAL / FRIENDLY RELATIONSHIP FOREVER!!

P.S: Are you listening to me?!

Thursday, March 4, 2010

தாயின் பிரிவு

ஐந்து வயதில் முதன்முறையாக
அழுதேன் தாய் என்னை
பள்ளியில் விட்ட பொழுது

இருபதுகளில், நானே
என்னை வேலையில் தொலைத்தபொழுது

இப்பொழுது மீண்டும்
என் தாய் தொலைபேசியில்
பேசும்பொழுதெல்லாம்...

நான் தனியாய் வெளிநாட்டில்
தொலைந்துள்ளபோது…!

Monday, March 1, 2010

என்றோ எழுதிய கவிதை - 15

காலேஜு போவுறப்போ, இன்னா நோட்டாயிருந்தாலும் மொத பக்கத்துல பிள்ளையார் சுழியோட, நடுவுல சின்னதா ஒரு கவிதை இருக்கும். சில சமயம் ஸீரியஸாவும், பல சமயம் லொள்ளாவும், அந்த வயசுக்கேத்த எதிர்பார்ப்போட, ஏக்கங்களோட இருக்கும். அப்படி நான் எழுதிய ஒரு கவிதை............

பாவை நீ
பூவை வைத்தாய்.......
பொட்டும் வைத்தாய்...
நெஞ்சை மட்டும்
ஏன் விட்டு வைத்தாய்?!!

புரியாதவங்களுக்குச் சுளுவாக

பாவை நீ
பூவை வைத்தால் கூந்தலுக்கு அழகு...
பொட்டு வைத்தால் நெற்றிக்கு அழகு...
நெஞ்சில் என்னை வைத்தாலோ அழகோ அழகு!

திருவல்லிக்கேணி •ப்ரெண்ட்ஸை பாத்துட்டு, 45B பஸ்ல, (ஈவினிங்) காலேஜ் போற ரூட்டுல (தொங்கிகினே) நோட்டை ரோட்ல விட்டுட்டேன்! ஸ்லோவா பஸ் போனதுல எப்படியோ இறங்கி நோட்-ஐ தேடி (ஓடி!) வந்தேன். அதற்குள் யாரோ எடுத்து கைல வெச்சிருந்தாங்கோ.

டேங்க்ஸ் சொல்லி 'ஜுட்'றதுக்கு முன்னாடி, எடுத்து வெச்ச மகராசனோட கிண்டல் கேள்வி "நோட்புக்கை(யும்) ஏன் விட்டு வைத்தாய்?!"