Friday, September 30, 2011

ஒரு கோடு

பிறந்தும், வளர்ந்தும்,
வாழ்ந்தும், இறந்தும்,
இருக்கும் உலகில்...

வளர்ந்ததின், வாழ்ந்ததின்
அர்த்தம் அறிவிக்காது
பிறப்பு - இறப்பு என்று
மட்டுமே சேதி சொல்லும்!

இறந்தவர் நம்மிடை
இல்லாததைச் சொல்லும்...!!
நமக்கு நாளை இல்லாமல்
போவதைச் சொல்லும்...!

Thursday, September 29, 2011

ஏன் இறைவா?

புகழுக்கு நாணி,
கர்வத்திற்குக் கூனி,
பணிவிற்குப் பழகி,
பந்தத்திற்க்கடங்கி,
பாசத்திற்கு மயங்கி,
நேசத்திற்கு முடங்கி,
உறவுக்கு ஏங்கியிருக்கும்
பிறப்பாய் நான்...

உருவம் இருந்தும்
உறவும், பலரும்,
எனை அருவமாய்
பார்க்கும் அவலம்...!

இவையாவும் புரியும்படி
படைத்ததும்...

ஏன் இறைவா?!

Wednesday, September 28, 2011

காதல் குளம்

ஓரிடத்திலிருக்கும்,
தீராதிருக்கும்,
அமுதசுரபியாயிருக்கும்,
அனுபவம் தந்திருக்கும்,
சிரிக்கச் சிரித்திருக்கும்,
சலனப்படச் சலனமாகும்,
முங்கி எழ, மோகம் தரும்,
மீண்டும் முங்கச்சொல்லும்...

எல்லையை என்னிடத்தில் தந்தே...
எல்லையில்லாதிருக்கும்!

Tuesday, September 27, 2011

புரிதல்

அறிவதற்கு ஆயிரம் உண்டிங்கு..
அறிவதெல்லாம் புரிவதில்லை!
புரியாதது அறிந்தும் பயனில்லை..!!

சிறிதாய் அறிந்தாலும், புரிந்தே
அறிதல் சிறப்பாகும்...!
வாழ்வை சிறப்பாக்கும்..!!

Monday, September 26, 2011

ஏணி

ஏற்றம் தரும் ஏணிக்கு
என்றும் ஏற்றமில்லை!
தன்னிலை அறிந்து,
தன்னிடமே இருந்திட,
ஏமாற்றமில்லை!!

ஏறுவோர் இறுங்கிடுவர்
என்றறிந்த ஏணி போல்,
ஏற்றிவிடு மற்றவரை...!
இறங்குவோரை தாங்கிடவே
நீ நிலையாய் இருந்திட,
ஏமாற்றமில்லை வாழ்விலே!!