Monday, November 30, 2009

மணிவிழா நாயகன் - 2


முள்ளும் மலரும் (1978)


அண்ணன்-தங்கை பாசம் என்றவுடன் நினைவுக்கு வருவது 'பாச மலர்'; இதற்கடுத்து, பளிச்செனப் பதிவது 'முள்ளும் மலரும்'தான்.

சில காட்சிகளை யாராலும் மறக்க முடியாது!

டிபிகல் தொழிலாளிபோல் 'ஸார் உடனே வரச்சொன்னீங்களாமே' என ஷேவிங் க்ரீம் முகத்துடன் அப்பாவி லுக்-குடன் சரத்பாபு முன் ரஜினி நிற்பது...

ஆஸ்பத்திரியிலிருந்து வரும் ரஜினியை அணைக்கும்போது 'இடது கை' துண்டித்திருப்பதை ஷோபா உணரும்போது...

'ரெண்டு கையும் ரெண்டு காலும் இல்லன்னாகூட காளி பொழைச்சுக்குவான் ஸார்! கெட்ட பையன் ஸார் அவன்!' என சரத்பாபுவிடம் ரஜினி பொருமும்போது...

படாபட், ரஜினியை மீறி, சரத்பாபுவிடம் ஷோபாவை ஏற்கச் சொல்லும்போது...

'இவ்ளோ பேர் என்ன சொன்னாலும் எனக்குக் கவலையில்லை; ஏன்னா எந்த நாயும் என்னோட கூடப் பொறக்கலை; ஆனா, வள்ளி நீ....நீயுமா என்னை விட்டு போறே?' என ஷோபாவிடம் நெகிழும்போது...

ரஜினி என்கிற குணச்சித்திர நடிகருக்குக்கான அஸ்திவாரம் இங்கேதான் ஆரம்பம்!

படத்திற்கு 'ரஜினி'தான் 'காளி' என்பதைத் தீர்மானித்து, தயாரிப்பாளர் வேணு செட்டியாரிடம் இயக்குநர் மகேந்திரன் சொன்னபோது,

'என்ன விளையாடுறியா? வில்லனா நடிக்கிற ஆளு; நல்ல கறுப்பு வேறே...வேணவே வேணாம். வேற யாராச்சும் சொல்லு.'


இதே வேணு செட்டியார் டபுள் பாஸிட்டிவ் பார்த்து விட்டு "அடப்பாவி! என் தலையிலே மண்ணை அள்ளிப் போட்டுட்டியே...படத்துல வசனமே இல்லே...அங்கே ஒண்ணு...இங்கே ஒண்ணு வருது வசனம்..படமா எடுத்திருக்கே..." என்று இயக்குநரைத் திட்டித்தீர்த்து விட்டார்!

படம் வந்த முதல் மூன்று வாரங்கள் பரபரப்பேயில்லாமிலிருக்க, 'படத்திற்கு இன்னும் நன்றாய் பப்ளிசிட்டி பண்ணுங்க' என ரஜினியும், மகேந்திரனும் கெஞ்ச, வேணு செட்டியார் சொன்னார்: "ஓடாத படத்திற்கும் பப்ளிசிடி தேவையில்லை...ஓடுகிற படத்திற்கும் பப்ளிசிடி தேவையில்லை. அது தெரியுமா, உங்களுக்கு?!'

உண்மைதானே? நான்காவது வாரத்திலிருந்து துவங்கிய ஆரவாரம் நூறாவது நாள் வரை ஓயத்தான் இல்லை!

தகவல்களுக்கு நன்றி:
சினிமாவும், நானும் - இயக்குநர் மகேந்திரன்

Friday, November 27, 2009

ஏலாமை!

ஆங்கே வீடின்றி
யாவரும் அலைகையில்
இங்கே என்னுள்ளே
வெற்றிடம்!

Thursday, November 26, 2009

மணிவிழா நாயகன் - 1

மணிவிழா நாயகன் என்கிற தொடர் பதிவில், ரஜினி என்கிற கலைஞனைப் பற்றிய எங்கள் கண்ணோட்டங்கள் இடம்பெறும். மற்றபடி அரசியலில் அவருடைய நிலைப்பாடுகள், இன்னபிற விஷயங்களில் எங்களுக்கு ஆர்வம் இருந்ததேயில்லை.

புவனா ஒரு கேள்விக்குறி (1977)


மகரிஷி எழுதிய நாவலைப் படமாக்க முற்பட்டபோது, இயக்குநர் எஸ் பி முத்துராமன், திரைக்கதை வசனகர்த்தா பஞ்சு அருணாச்சலத்திற்கும் தோன்றிய 'வில்லனா நடிக்கற 'புதுப்பையனை' ஹீரோவாகவும், கதாநாயகனா எஸ்டாப்ளிஷான சிவக்குமாரை வில்லனாகவும் மாத்திப் போட்டா என்ன?' தான் ரஜினி எனும் நாயகன் உருவாகக் காரணமாயிருந்தது.

சம்பத் என்கிற இளைஞனாக, காதலை இழந்த காதலனாக, சந்தர்ப்பவசத்தால் தன்னை இழந்த நாயகிக்குக் கணவனாக, குடித்துக்குடித்து உடலை வருத்திக்கொள்ளும் நோயாளியாக, ரஜினியை மாற்றிய பெருமை நிச்சயம் இயக்குநர் எஸ் பி எம்-க்கு உண்டு. அதிலும் சிகரெட்டைப் புகைத்தபின், சாம்பலைச் சுண்டும் ரஜினி ஸ்டைல் அடேங்கப்பா!

படப்பிடிப்பின் முதல் நாளில் தனக்கு நீட்டப்பட்ட வசனங்களைப் பார்த்துவிட்டு 'பாலச்சந்தர் ஸார் ஒரு முழுப்படத்துக்கே இவ்ளோ டயலாக் தரமாட்டார். எந்த நம்பிக்கையிலே எனக்கு இவ்ளோ தர்றீங்க. ரொம்ப கஷ்டம், என்ன விட்டுடுங்க' எனத் தப்பிக்க நினைத்த ரஜினியைச் சமாதானப்படுத்தி நடிக்க வைத்த புண்ணியமும் எஸ் பி எம்-க்குத்தான்!

ரஜினியால் தன்னுடைய காதலியைக் காப்பாற்ற முடியாமல் போவது, எங்களுக்குத் தெரிந்து இந்த ஒரு படத்தில் மட்டும்தான்!

நடிகர் திரு சிவகுமார் அவர்கள் கூறியது போல 'அதிர்ஷ்டம் வாயிற்கதவைத் திறந்து, ஆரத்தியை எடுத்து, ரஜினியை வரவேற்கத் துவங்கிவிட்ட காலகட்டம் அது!'

தகவல்களுக்கு நன்றி:
ஏவி.எம். தந்த எஸ்.பி.எம் - விகடன் பிரசுரம்
இது ராஜபாட்டை அல்ல - அல்லையன்ஸ்

Wednesday, November 25, 2009

மனிதமும் மல்லிகையும்!

குப்பை லாரியின் பின்னால்
இழுத்துப் புரண்டு சிதைந்து
வாழ்க்கையின் ஏதோ ஒரு
பக்கத்தை நினைவுபடுத்தியபடி
செல்கிறது
நேற்றெங்கோ மணத்த
மல்லிகைச் சரம்.

கவனிக்க மனமின்றி
இயங்குகிறது
காங்க்ரீட் சதுரங்களில்
நசுங்கிக் கசியும்
இயல்பு மறந்த மனிதம்!