Tuesday, August 17, 2010

சுதந்திர தினம்!

வித்தகம் பயின்று தேசம் விட்டு
விதேசம் வளர்த்தோம் வளர்ந்தோம்
தன்னாடு தழைக்க நாமின்றி நாடு கடந்து
பிழைத்தோம்

தன் தேசம் சொர்க்கமறியாது
விதேசம் சொர்ககமானது
என் சோகம் மறந்து போனது
மறத்து போனது காலம் கடந்து போனது
அனுபவத்தோடு வயதும் கூட
தாய் நாட்டுப்பற்று பெற்றவர் ரூபத்தில்
என்னை துரத்தி இன்று
என் தேசத்தில் நான் கண்டேன் சுதந்திர தினம்

என் தேசசுவாசத்தில் கொடியேற்றி
என் சுவாசம் மறந்து போகும் சுகம் கண்டேன்
ஈரைந்து ஆண்டு கடந்து
தேசியாய் நான் உடலில் படாது
கொடி குத்தி கொண்டேன் சட்டையில்
சட்டையில் குத்திய ஊசி மனதில் ரணமாய்
பாடும் தேசப்பாட்டு நானுமறிவேன்

இது போல் கொடியில் அன்னையையும்
தந்தையையும் காணும் பல கோடி
விதேசசுவாசிகளுக்கு வேண்டிக்கொண்டேன்

இனி என் போல் பல தேசிகள் விதேசம்
விட்டு நம் தேசம் வளர்க்க வருவாரிங்கே
வளருவாரிங்கே

இனி இந்திய கொடி பட்டொளி வீசி பறக்கும்
என் போல் இருப்போருக்கு
கண்ணில் இரு துளி ஈரம் விட்டு படபடக்கும்
இந்திய மண்ணில் யாவருக்கும் இடமிருக்கும்
தேச சுவாசம் நுகர நினைப்போருக்கு சுகமிருக்கும்

ஜெய்ஹிந்த்…!

Saturday, June 26, 2010

யாதுமாகி!

நேற்றாகி, இன்றாகி, பொழுதாகி,
என் ஆலம்விழுதாகி, வேராகி,
எனை சுமந்து,
இன்று நான் சுமக்க விரும்பும் தேராகி,
நிற்கும் தெய்வமாகி,
தொழுது பெரும் வரமாகி,
அது கிட்டா சோகமாகி,
தரும் நினைவுமாகி,
என்னுள் யாதுமாகி நின்றாய்
என் தாயே!

Thursday, June 24, 2010

ஜனனம்!

நிதம் பிறக்கும் பிறவி நான்,
இருட்டு கருவறையாய் உறக்கம்!
விழிக்க ஜனனம், எனக்கிது
தினமும் நடக்கும் பிரசவம்!

Friday, June 4, 2010

கவலை

இறைவனிடம் வரம் வேண்டி நின்றேன்
இருக்க நிலம் தந்தான்;
பசி தீர உணவும், தாகந்தீர தண்ணீரும்
கூரையாய் வானும் தந்து உபசரித்து,
'வேறென்ன வேண்டும்' என்றான்.

யாவும் பெற்ற பெருமிதத்தில்,
'என்றும் நிலையாய் உன்னை
நினைத்திருக்க வேண்டுமென்றேன்!'

கவலை தந்தான்!!

Saturday, March 27, 2010

தொலைபேசி!

உறவுகள் தொலையாதிருக்க
குரல்வழியாய்
தூரத்தை மறைக்கும்...

வைத்த பின்
தொலைவை இன்னும் தொலைவாக்கும்!!